இலங்கை இந்திய தூதரகத்தில் தமிழ் தெரிந்த அதிகாரிகள்- சிபிஎம் கோரிக்கை
ராமேஸ்வரம்: இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் வரதராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை கடற்படையின் அத்து மீறலை கண்டித்து பாம்பனில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாநில செயலாளர் வரதராஜன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாம்பனை சேர்ந்த 5 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்திச் சென்று பொய் வழக்கு போட்டுள்ளனர். இந்த வருடம் மட்டும் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் சுமார் 42 பேர் பிடித்து செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களோடு 13 படகுகளும் பிடித்து செல்லப்பட்டுள்ளது. கிறிஸ்டோபர், கிறிஸ்டி, சந்தியாகு என்ற மூன்று மீனவர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் தமிழ் தெரிந்த அதிகாரிகளை மத்திய அரசு நியமிக்க வேண்டும். இதற்காக ஜனநாயக ரீதியில் போராடுவோம். தமிழக மீனவர்களை காப்பாற்ற மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துவோம்.
இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் குடும்பத்தினர்ககு நாள் ஒன்றுக்கு ரூ.50 வழங்கி வந்தது. அந்த தொகை தற்போது ரூ.20ஆக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதை மீண்டும் ரூ.50 ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும்.
புதுக்கோட்டையில் நடக்கும் கட்சியின் மாநில குழுக் கூட்டதில் அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications