ஓகனேக்கலில் முதலில் கூட்டு சர்வே நடத்த வேண்டும்: எடியூரப்பா
ஷிமோகா: ஓகனேக்கலில் முதலில் கூட்டு சர்வே நடத்த வேண்டும். அதன் பிறகு குடிநீர்த் திட்டம் குறித்து தமிழகம் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் தமிழக அரசு தன்னிச்சையாக செயல்பட்டு வருகிறது என்று கர்நாடக முதல்வர் எடியூரப்பா கூறியுள்ளார்.
ஷிமோகா வந்த எடியூரப்பா அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், ஓகனேக்கலில் கூட்டுக் குடிநீர்த்திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசிடம் தமிழகம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் அதைப் பெறாமல் குடிநீர்த் திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு முயற்சிக்கிறது.
அங்கு முதலில் எல்லைகளை தெளிவுபடுத்திக் கொள்ள கூட்டுச் சர்வே நடத்தப்பட வேண்டும். அதன் பின்னர்தான் இந்தத் திட்டம் குறித்து விவாதிக்க வேண்டும். ஆனால் தன்னிச்சைப்படி தமிழக அரசு செயல்பட்டு வருகிறது.
இதுகுறித்து மத்திய அரசிடம் புகார்தெரிவிப்போம். தமிழகத்தின் குடிநீர்த் திட்டத்தை கடுமையாக ஆட்சேபிப்போம் என்றார் எடியூரப்பா.