ஜம்மு கலவரம்: பேச்சுவார்த்தைக்கு 4 பேர் குழு அமைப்பு
ஜம்மு: அமர்நாத் நில விவகாரம் தொடர்பாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக வன்முறையில் சிக்கித் தவிக்கும் ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் அமைதியை கொண்டுவரும் வகையில், ஸ்ரீ அமர்நாத் சங்கர்ஷ் சமிதியுடன் பேச்சு நடத்த நான்கு பேர் கொண்ட குழுவை ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என். வோரா நியமித்துள்ளார்.
அமர்நாத் தேவஸ்தானத்திற்கு ஜம்மு காஷ்மீர் மாநில அரசு சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான நிலத்தை கொடுத்தது. இதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஸ்ரீநகரில் வன்முறை வெடித்தது. இதையடுத்து குலாம் நபி ஆசாத் தலைமையிலான அரசு அந்த முடிவை திரும்பப் பெற்றுக் கொண்டது. அதேசமயம், ஆசாத் அரசுக்கு ஆதரவு தந்து வந்த மக்கள் ஜனநாயகக் கட்சி தனது ஆதரவை விலக்கிக் கொண்டதால் ஆசாத் அரசு கவிழ்ந்தது.
நிலத்தை திரும்பப் பெற்றதைக் கண்டித்து பாஜக மற்றும் அமர்நாத் சங்கர்ஷ் சமிதி உள்ளிட்டவை போராட்டத்தில் குதித்தன. இதனால் ஜம்மு நகரில் கடந்த ஒரு மாதமாக பெரும் வன்முறையாகஉள்ளது. கடந்த சில நாட்களாக இது பெரும் கலவரமாக மாறியுள்ளது. இந்த வன்முறை மற்றும் கலவரத்தில் பலர் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து ஜம்மு ஊரடங்கில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.
பிரதமர் தலையீடு:
இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க நேற்று பிரதமர் மன்மோகன் சிங் இந்த விவகாரத்தில் தலையிட்டார்.
நேற்று பிரதமர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யரப்பட்டது. பாஜக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் அனைத்துத் தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். போராட்டத்ைத கைவிட வேண்டும்.சுமூகமான சூழ்நிலையை உருவாக்க ஒத்துழைக்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டது.
மேலும், போராட்டத்தைக் கைவிட ஆளுநர் வோராவை நீக்க வேண்டும் என்ற அமர்நாத் சங்கர்ஷ் சமிதியின் கோரிக்கையை இக்கூட்டம் நிராகரித்தது.
கூட்டத்தில் விவாதிக்கப்பட்டவை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில், பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்க அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என இக்கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது என்றார்.
பேச்சுவார்த்தைக்கு குழு:
இந்த நிலையில் நான்கு பேர் கொண்ட குழு ஒன்றை ஆளுநர் வோரா இன்று அமைத்துள்ளார். இக்குழு போராட்டத்தை தலைமையேற்று நடத்தி வரும் அமர்நாத் சங்கர்ஷ் சமிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தும்.
இக்குழுவில் முன்னாள் தலைமைச் செயலாளர் புளோரியா, ஜம்மு காஷ்மீர் பல்கலைக்கழக துணைவேந்தர் அமிதாப் மட்டூ, ஜம்முகாஷ்மீர் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஜி.டி. சர்மா, அமர்நாத் கோவில் தேவஸ்தான தலைமை செயல்அதிகாரி பி.பி. வியாஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இக்குழு அமர்நாத் சங்கர்ஷ் சமிதியுடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினையைத் தீர்க்க முயலும்.
இந்த குழு குறித்து அமர்நாத் சங்கர்ஷ் சமிதியின் ஒருங்கிணைப்பாளர் லீலா கரண் சர்மா கூறுகையில், புதிய கமிட்டி ஜம்மு பிராந்திய மக்களின் எதிர்பார்ப்புகளை எப்படி இந்த கமிட்டி பூர்த்தி செய்யப் போகிறது என்பதை நாங்கள் கவனிக்கப் போகிறோம். அமர்நாத் தேவஸ்தான போர்டுக்குக் கொடுக்கப்பட்ட நிலம் ஏன் திரும்பப் பெறப்பட்டது. அற்கான காரணம் என்ன என்பதை அறிய நாங்கள் விரும்புகிறோம் என்றார்.