சென்னை டூ சேலத்திற்கு நாளை முதல் புதிய ரயில் தொடக்கம்
சென்னை: சென்னை-சேலம் இடையிலான புதிய ரயில் சேவை நாளை தொடங்குகிறது.
சென்னை எழும்பூரில் இருந்து சேலத்துக்கு புதிய ரயில் சேவை தொடங்கப்படும் என்று இந்தாண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும் விழுப்புரம்-விருத்தாச்சலம் இடையே அகல ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்று வந்ததால் இந்த புதிய ரயிலை உடனடியாக இயக்க முடியவில்லை.
தற்போது அப்பணி முடிவடைந்து விட்டது. இதையடுத்து அறிவிக்கப்பட்ட புதிய ரயில் நாளை முதல் தனது சேவையை தொடங்குகிறது.
இதற்கான தொடக்க விழா நாளை மாலை 3.30 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெறுகிறது.
ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு புதிய ரயிலை தொடங்கி வைக்கிறார். இந்த ரயில் தினசரி இரவு 11.20 மணிக்கு சென்னையிலிருந்து கிளம்பி அடுத்த நாள் காலை 5.45 மணிக்கு சேலத்தை சென்றடையும்.
மறு மார்க்கத்தில், சேலத்திலிருந்து இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 4 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும்.
தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருதாச்சலம், சின்ன சேலம், ஆத்தூர், வாழபாடி கேட், அயோத்தியா பட்டினம் ஆகிய இடங்களில் இந்த ரயில் நின்று செல்லும் எனஅறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான முன்பதிவு இன்று முதல் தொடங்கியுள்ளது.