22ம் தேதி சிரஞ்சீவி கட்சி உதயம்: சுஹாசினிக்கு பதவி!

ஆந்திர மாநில அரசியலில் கோலோச்சிய சூப்பர் ஸ்டார் நடிகர் என்.டி.ஆருக்குப் பிறகு, பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையில் சிரஞ்சீவி அரசியலுக்கு வருகிறார். எப்போது, எப்போது என்று எதிர்பார்க்கப்பட்ட அவரது கட்சி ஆகஸ்ட் 22ம் தேதி கோவில் நகரமான திருப்பதியில் பிறக்கிறது.
53 வயதாகும் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, திருப்பதியில் அன்று நடைபெறும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பங்கேற்று தனது கட்சியை தொடங்கி வைக்கிறார். கட்சியின் பெயர், கொடியை அவர் அறிவிக்கிறார். கட்சிக் கொள்கையையும் அவர் அறிவிக்கிறார். இடதுசாரிகளுடன் கூட்டணி சேரும் வகையில் தனது கொள்கைகளை அவர் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
திருப்பதியில் பொதுக் கூட்டம் நடைபெறவுள்ள இடத்தை சிரஞ்சீவியின் மைத்துனரும், அவருடைய கட்சி பணிகளை கவனித்து வருபவருமான, தயாரிப்பாளர்-நடிக்ர அல்லு அரவிந்த் நேரில் சென்று பார்த்து ஏற்பாடுகளை முடுக்கி விட்டுள்ளார்.
தெலுங்கானா, ராயலசீமா, கடலோர ஆந்திர மாநில பகுதிகளிலிருந்து லட்சக்கணக்கானோர் இந்த கூட்டத்திற்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் திருப்பதி இப்போதே பரபரப்பில் மூழ்கிப் போயுள்ளது.
கட்சியைத் தொடங்கிய பின்னர் நாடாளுமன்றத் தேர்தலுக்கு கட்சியை தயார்படுத்தும் வகையிலான கூட்டங்களுக்கு சிரஞ்சீவி தரப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் ஆலோசனைக் கூட்டங்களையும் சிரஞ்சீவி நடத்தவுள்ளார்.
தனது கட்சியில் பெண்களையும், இளைஞர்களையும் பெருமளவில் இணைக்க சிரஞ்சீவி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மகளிர் அணித் தலைவி சுஹாசினி:
சிரஞ்சீவி கட்சியின் மகளிர் அணித் தலைவி பொறுப்பு நடிகையும் இயக்குனர் மணிரத்னத்தின் மனைவியுமான சுஹாசினிக்கு வழங்கப்படவுள்ளது. இப்பதவியை ஏற்க அவர் தனது சம்மதத்தை வழங்கி விட்டதாகவும் தெரிகிறது.
தமிழ் நடிகையான சுஹாசினி ஏராளமான தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். சிரஞ்சீவியுடன் நிறையப் படங்களில் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் என்பது நினைவிருக்கலாம். தமிழகத்திலும் தனது கட்சிக்கு அடையாளம் இருக்க வேண்டும் என்பதற்காகவே சுஹாசினியை சிரஞ்சீவி தேர்வு செய்துள்ளதாக தெரிகிறது.
இதேபோல பிரபல தெலுங்கு நடிகையான ஜெயசுதாவும் சிரஞ்சீவி கட்சியில் இணையத் திட்டமிட்டுள்ளார். திருப்பதி மாநாட்டில் சுஹாசினி, ஜெயசுதா தவிர மேலும் பல திரையுலகினர் சிரஞ்சீவி கட்சியில் தங்களை இணைத்துக் கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications