ஊட்டியில் ஹோமியோபதி மருந்தாலை-அன்புமணி உத்தரவு
ஊட்டி: ஊட்டியில் ஹோமியாபதி மருந்து ஆலை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
உலக மக்கள் ஆங்கில மருத்துவ முறையை பெரும்பாலும் விரும்பினாலும், பக்க விளைவு இல்லாதது, பாராம்பரிய மருத்துவ முறை என்று கூறப்படும் ஹோமியோபதி மருத்துவ முறை உலகின் பல நாடுகளில் புகழ் பெற்று விளங்குகிறது.
ஜெர்மனி நாட்டு மருத்துவ முறையான ஹோமியோபதி மருத்துவ முறைக்கு முக்கிய தேவை நோய்களை குணப்படுத்தும் மூலிகை செடிகள் தான். மூலிகை செடிகள் மலைப் பிரதேங்களில் தான் செழித்து வளரும். ஆனால் அவைகளை கண்டறிந்து எடுத்து வருவது அவ்வளவு எளிது அல்ல.
இதனால் அரசு சார்பில், நீலகிரி மாவட்டம், ஊட்டி எமரால்டு பகுதியில் மூலிகை பண்ணை அமைக்கப்பட்டுள்து.
மத்திய அரசின் சுகாதாரத்துத்துறை சார்பில் கடந்த 1987 ம் ஆண்டு இந்த மூலிகைப் பண்ணைத் தொடங்கப்பட்டது.
இந்த பண்ணையில் மிக கொடிய நோய்களான, கண் நோயை குணப்படுத்தும் பிலரேரியா, ஆஸ்துமா நோயை குணப்படுத்தும் லியோனசு மூலிகை, மற்றும் மாரடைப்பை தடுக்கும் டிஜிடாலிசு மூலிகை, போன்ற உலக அளவில் பயன்படுத்தும் அரிய மூலிகைகள் சுமார் 100 க்கும் மேற்பட்டவை உள்ளன.
எங்கும் இல்லாத தட்பவெட்ப நிலை ஊட்டியில் மட்டும் நிலவுவதால் உலக கவனத்தை ஈர்க்கும் வல்லமை கொண்ட பல விதமான முக்கிய மூலிகை செடிகள் பக்குவமாக வளர்க்கப்பட்டு வருகிறது.
உலகில் எங்குமே கிடைக்காத அபூர்வ மூலிகை செடிகள் இருந்தும், மருந்து தயாரிக்கும் ஆலை இல்லாதாதல் அந்த மூலிகை செடிகள் பயனற்ற நிலையில் இருந்தது.
இந்த நிலையில், ஊட்டி வெலிங்டனில் உள்ள மூலிகைப் பண்ணையில் ஹோமியோபதி மருந்து ஆலை அமைக்க வேண்டும் என்று ஹோமியோபதி மருத்துவ அறிவியல் கலந்தாய்வு குழுவினர் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணிக்கு கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஆய்வு செய்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி, அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்தினார்.
இதன் விளைவாக, எமரால்டு பகுதியில் மூலிகை பண்ணை அமைக்க மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி உத்தரவிட்டுள்ளார்.
மேலும், அதற்கு தேவையான நிதியையும் உடனடியாக ஒதுக்கும்படி ஆணையிட்டுள்ளார்.