இன்று முதல் எழும்பூர்-சேலம் 'சூப்பர் பாஸ்ட்' ரயில்
சென்னை: சென்னையிலிருந்து விழுப்புரம், விருதாச்சலம் வழியாக சேலத்திற்கு இன்று முதல் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் துவங்கப்படுகிறது.
எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இந்த ரயில் (எண்- 2297) தினமும் இரவு 11.20 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 5.45 மணிக்கு சேலம் சென்றடையும்.
சேலத்திலிருந்து தினமும் இரவு 9.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 4 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், சின்ன சேலம், ஆத்தூர், வாழப்பாடி கேட், அயோத்தியாபட்டினம் மற்றும் சேலம் டவுன் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னையிலிருந்து சேலத்திற்கென இயக்கப்படும் முதல் ரயில் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை சேலம் வழியாக பிற நகர்களுக்குத்தான் ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.
இந்த ரயிலின் துவக்க விழா இன்று மாலை நடக்கிறது. இவ்விழாவிற்கு மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் வேங்கடபதி தலைமை வகிக்கிறார். ரயில்வே இணையமைச்சர் வேலு கொடி அசைத்து புதிய ரயில் போக்குவரத்தை துவக்கி வைக்கிறார்.