காவல்துறை அதிகாரிகளுடன் கருணாநிதி ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் தீவிரவாத சதித் திட்டங்கள் முறியடிக்கப்பட்டுள்ள பின்னணியில், சுதந்திர தின பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முதல்வர் கருணாநிதி காவல்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
சமீபத்தில் நெல்லையில் பிடிபட்ட தீவிரவாதிகள் மூலமாக தமிழகத்தில் சுதந்திர தினத்தின்போது நிகழ்த்த திட்டமிடப்பட்டிருந்த சதித் திட்டம் அம்பலமானது. தீவிரவாத கும்பலில் இடம் பெற்றுள்ள பலர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் அடுத்தடுத்து கைதாகி வருகின்றனர்.
இந்த நிலையில் மாநிலம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில், தலைமை செயலாளர், உள்துறை செயலர், டி.ஜி.பி., ஏ.டி.ஜி.பிக்கள், சி.பி.சி.ஐ.டி. போலீசார், உளவுப் பிரிவு போலீசார் என பல உயரதிகாரிகள் பங்கேற்றதாக கூறப்படுகிறது.