கபூர் வீட்டில் ரெய்ட்-முக்கிய செல்போன் எண்கள் சிக்கின!
{image-abdul gafoor250_08082008.jpg tamil.oneindia.com}திருநெல்வேலி: நெல்லை பேட்டையில் உள்ள அப்துல் கபூரின் வீட்டில் போலீஸார் நேற்று நள்ளிரவு முதல் இன்றுகாலை வரை அதிரடி சோதனை நடத்தினர். இதில் சில முக்கிய செல்போன் எண்கள் உள்ளிட்ட தடயங்கள் சிக்கியுள்ளன.
தமிழகத்தில் வெடிகுண்டுச் சம்பவங்களுக்குத் திட்டமிட்டிருந்த அப்துல் கபூர், அலி அப்துல்லா, ஹீரா உள்ளிட்டோர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் 3 பேரையும் 10 நாள் காவலில் போலீஸார் எடுத்து நெல்லைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்குள்ள பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதான வளாகத்தில் வைத்து இவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இன்று 8வது நாளாக விசாரணை நடந்து வருகிறது. 3 பேரையும் ஒன்றாக உட்கார வைத்து விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் அப்துல் கபூரின் பேட்டை இல்லத்தில் போலீஸார் அதிரடி சோதனையில் இறங்கினர். இன்று காலை வரை ரெய்டு தொடர்ந்தது.
இந்த சோதனையின்போது சில முக்கிய செல்போன் எண்கள் உள்ளிட்ட தடயங்கள் சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செல்போன்களை வைத்து யார் கபூருக்கு பணம் கொடுத்தது, வெடிபொருட்களை வழங்கியது உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும் என போலீஸார் நம்புகின்றனர்.
இதே சமயத்தில், ஹீரா உள்ளிட்ட பிறரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது உறுதிப்படுத்தப்படவில்லை.