ஜம்முவில் சிவராஜ் பாட்டீல் தலைமையிலான மத்திய குழு ஆய்வு
ஜம்மு: அமைதியிழந்து தவிக்கும் ஜம்மு நகரில் அமைதி திரும்புவதற்கான வழிகள் குறித்து ஆராயும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் தலைமையிலான 18 பேர் கொண்ட அனைத்துக் கட்சிக் குழு ஜம்மு வந்துள்ளது. ஆனால் இக்குழுவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என போராட்டத்தை நடத்தி வரும் ஸ்ரீ அமர்நாத் சங்கர்ஷ சமிதி அமைப்பு அறிவித்துள்ளது.
ஜம்முவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாகவும், அங்குள்ள நிலைமையை ஆராயும் வகையிலும் பாட்டீல்தலைமையிலான 18 பேர் கொண்ட அனைத்துக் கட்சிக் குழுவை மத்திய அரசு அமைத்துள்ளது.
இக்குழு உறுப்பினர்கள் பாட்டீல் தலைமையில் இன்று ஜம்மு வந்தனர். இக்குழுவினர் மாநில அரசின் விருந்தினர் மாளிகையில், தங்களது ஆய்வைத் தொடங்கினர். அமர்நாத் சங்கர்ஷ சமிதியினருடன் பேசவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.
ஆனால் இக்குழுவிலிருந்து தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெஹபூபா முப்தி, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் சைபுதீன் சோஸ் ஆகியோரை நீக்கும் வரை பேச்சுவார்த்தைக்கு வர மாட்டோம் என அமர்நாத் சங்கர்ஷ சமிதி எச்சரித்துள்ளது.
இந்த தலைவர்கள்தான் பிரச்சினை வெடிக்க முக்கிய காரணம். எனவே இவர்களுடன் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்த முடியாது. இவர்கள் இல்லாத குழுவுடன் பேச்சு நடத்த எங்களுக்குத் தயக்கமில்லை என்று சமிதியின் செய்தித் தொடர்பாளர் லீலா கரண் சர்மா கூறியுள்ளார்.
ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
இதற்கிடையே, ஜம்முவில் மேலும் பல பகுதிகளில் இன்று ஊரடங்கு உத்தரவு அமல்பபடுத்தப்பட்டது. மேலும் ராணுவத்தினர் பல பகுதிகளில் கொடி அணிவகுப்பும் நடத்தினர்.
சம்பா, ஜம்மு, ரஜோரி, கதுவா ஆகிய பகுதிகளில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு தளர்வு விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.
இப்பகுதிகளிலும், பூன்ச் பகுதியிலும் ராணுவம் கொடி அணிவகுப்பு நடத்தியது.
இதுவரை எந்தப் பகுதியிலும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறவில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
இப்பகுதிகளில் கடந்த 9 நாட்களாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications