கலெக்டர் உத்தரவுக்கு தடை கோரிய கவுன்சிலருக்கு அபராதம்
மதுரை: சிவகங்கை மாவட்ட கலெக்டரின் உத்தரவுக்குத் தடை கோரி மனுத்தாக்கல் செய்த முன்னாள் கவுன்சிலருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்தது.
சிவகங்கை மாவட்டம் தாயமங்கலம் பஞ்சாயத்தில் நேமம் - முதவேலியில் ரூ.10 லட்சம் மதிப்பில் சாலை மேம்பாடு உட்பட ரூ.76.46 லட்சம் மதிப்பில் 12 பணிகளுக்கு அனுமதி வழங்கி மே 12 அன்று சிவகங்கை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி காரைக்குளம் பஞ்சாயத்து முன்னாள் கவுன்சிலர் சுப்பிரமணியன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுமீதான விசாரணை நீதிபதிகள் எலிப் தர்மா ராவ், வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் நடந்தது.
இதுதொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், நேமம் - முதவேலி சாலை மேம்பாட்டுத் திட்டத்திற்கு - இளையான்குடி எம்எல்ஏ வின் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பணம் ஒதுக்கப்பட்டது.
பின்னர், இப்பணி உள்பட தாயமங்கலம் பஞ்சாயத்தில் பல பணிகளுக்கு நபார்டு வங்கி ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கியது.
இதனால், இந்தச் சாலையை - எம்எல்ஏ நிதியில் போடவேண்டாம் என்று எம்எல்ஏ கடிதம் அனுப்பினார். இதையடுத்து அந்த அனுமதி ரத்து செய்யப்பட்டது என்று கூறியிருந்தார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், தொகுதி எம்எல்ஏவுக்கு, திட்டத்தை தேர்வு செய்யவும், மாற்றவும் உரிமை உண்டு. நேமம்-முதவேலி சாலை மேம்பாட்டுத் திட்டம்தான் பிரச்சினை. அதை மட்டுமே மனுதாரர் எதிர்த்திருக்க வேண்டும். ஆனால், 12 திட்டங்களையும் ரத்து செய்யக் கோருவது சரியல்ல.
மனுதாரர் உண்மைகளை மறைத்து, மோசடியாக மனு செய்துள்ளார். பொதுநலன் வழக்கு என்ற பெயரில் எங்கள் நேரத்தை வீணடித்துள்ளார்.
இதனால், அவருக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கப்படுகிறது. இதுபோல் மோசடி மனு தாக்கல் செய்பவர்களுக்கும், பொதுநல வழக்கு முறையை தவறாகப் பயன்படுத்துபவர்களுக்கும், இந்த அபராதம் பாடம் கற்பிக்கும். அபராதத்தை மதுரை சட்ட உதவி சேவை மையத்திற்கு 4 வாரத்தில் செலுத்த வேண்டும் என்று கூறியிருந்தனர்.












Click it and Unblock the Notifications