ரயில் சுரங்கப் பாதைகளை தகர்ப்போம் - தீவிரவாதிகள் மிரட்டல்
திருவனந்தபுரம்: செங்கோட்டை அருகே ஆரியங்காவு, புனலூர் இடையே உள்ள ரயில்வே சுரங்கப் பாதைகளை குண்டு வைத்து தகர்க்கப் போவதாக போனில் மிரட்டல் வந்ததை அடுத்து இந்த வழித்தடத்தில் உள்ள 6 ரயில்வே சுரங்கப் பாதைகளிலும் போலீசார் இரவு பகலாக சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 தினங்களுக்கு முன் கொல்லம் அருகே குண்டராவில் உள்ள லாட்ஜில் சந்தேகத்திற்கு இடமான ஆப்கனைச் சேர்ந்த 3 பேர் பிடிபட்டனர். அவர்களிடம் மத்திய உளவுப்பிரிவு அமைப்பான ரா (RAW) அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர்களிடம் பெற்ற தகவலின் அடிப்படையில், தமிழகத்தை தகர்க்க சதி திட்டம் தீட்டிய தீவிரவாதிகள் கேரள மாநிலம் கொல்லத்தில் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகத்தில் இப்பகுதிகளில் அதிரடி சோதனை நடக்கிறது.
கொல்லம் மாவட்டத்தில் புனலூர், ஆரியங்காவு உள்பட பல்வேறு பகுதிகளில் கேரளா மற்றும் தமிழ்நாடு போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். தமிழக - கேரள எல்லையில் உள்ள ஆரியங்காவு சோதனைச் சாவடியில் இருமாநில போலீசாரும் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.
போன் மிரட்டல்!
இந்தநிலையில் தமிழக - கேரள எல்லையில் உள்ள குளத்துப்புழா போலீஸ் ஸ்டேஷனுக்கு நேற்று இரவு ஒரு போன் வந்தது. அதில் பேசிய ஆசாமி ஆரியங்காவு - புனலூர் இடையே உள்ள ரயில்வே சுரங்கப்பாதையை வெடிகுண்டு வைத்து தகர்க்கப் போவதாகவும் தகவல் கூறியுள்ளான்.
நெல்லை - கொல்லம் இடையே உள்ள இந்த மீட்டர் கேஜ் பாதை தற்போது அகலப்பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் கொல்லம்-புனலூர் இடையே ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் இருந்து புனலூர் வரை மட்டுமே ரயில்கள் சென்று கொண்டு இருக்கின்றன. தினமும் புனலூரில் இருந்து நெல்லை, தென்காசி, செங்கோட்டைக்கு 4 ரயில்கள் இயக்கப்படுகின்ரன.
இந்த பாதையில் மொத்தம் 6 சுரங்கப் பாதைகள் உள்ளன. இடமண் - ஒற்றக்கல், ஒற்றக்கல் - தென்மலை, தென்மலை-இடப்பாளையம், ஆரியங்காவு - பகவதிபுரம் ஆகிய பாய்ண்ட்டுகளில் இந்த சுரங்கப்பாதைகள் அமைந்துள்ளன.
இந்த சுரங்கப் பாதைகள் ஒவ்வொன்றும் ஒரு கிலோ மீட்டர்வரை நீளம் கொண்டவையாகும். 1903-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால் கட்டப்பட்டவை.
இவற்றை தகர்க்கப் போவதாக மிரட்டல் வந்தததால் குளத்துப்புழா இன்ஸ்பெக்டர் தலைமையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications