ஆந்திரா, மகாராஷ்டிரத்தில் கன மழை-கிருஷ்ணா ஆற்றில் வெள்ளம்
விசாகப்பட்டிணம்&மும்பை: வங்காள விரிகுடாவில் மையம் கொண்டிருந்த காற்றழுத்தம் வலுவிழக்கத் தொடங்கியுள்ளது என்றாலும் ஆந்திராவில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அங்கு மேலும் 24 மணி நேரத்துக்கு மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திராவை கடந்த 5ம் தேதி முதல் கனமழை வெளுத்துக் கொண்டிருக்கிறது. மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 93 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்காள விரிகுடாவின் வடமேற்கில் ஏற்பட்ட குறைந்த அழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திரா மற்றும் ஒரிஸ்ஸாவில் பலத்த மழை பெய்து வருகிறது. இந்நிலையில் காற்றழுத்தம் ஒரிஸ்ஸா மாநிலத்தின் கியோன்ஜர் மாவட்டம் உள்பட வடக்கு பகுதியை நோக்கி நகர்ந்துள்ளது. ஆனால் காற்றழுத்தம் வலுவிழக்கக் கூடும் என்று புயல் எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
ஆனாலும் ஆந்திராவில் மேலும் 24 மணி நேரத்துக்கு மழையோ இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் அறிவிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்துக்கு அங்கு பலத்த காற்று வீசக் கூடும் என்றும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதனால் கிருஷ்ணா நதி படுகையில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான பகுதிக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தாழ்வான பகுதியில் இருக்கும் மக்களும் அங்கிருந்து வெளியேறும்படி எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே மகாராஷ்டிரத்தின் பல பகுதிகளிலும் பருவ மழை வலுவடைந்து, கன மழை பெய்து வருகிறது. மும்பை, புனே உள்பட பல பகுதிகளில் கன மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications