நாக்கை வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தியவர் சாவு
சாட்னா (ம.பி.): தனது நாக்கை வெட்டி துர்கை அம்மனுக்கு நேர்த்திக் கடன் செலுத்தியவர் அடுத்த சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். மத்திய பிரதேசத்தில் இந்த பரிதாபமான சம்பவம் நடந்தது.
மத்திய பிரதேசம் சாட்னா மாவட்டம் நகோட் டெஹ்சில் பகுதியைச் சேர்ந்தவர் கன்ஷ்யாம் கோரி (45), டெய்லர். இவர் துர்கா தேவியின் தீவிர பக்தர். தெய்வ நம்பிக்கை காரணமாக துர்கா தேவி படத்தின் முன்பு தனது நாக்கை வெட்டி நேர்த்திக் கடன் செலுத்தினார் கன்ஷ்யாம். பின்னர் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முற்பட்டனர். ஆனால், தெய்வத்தின் அருளால் தனக்கு ஒன்றும் ஆகாது என்று கூறி அவர்களை தடுத்துவிட்டார் கன்ஷ்யாம். இதையடுத்து அனைவரும் வழிபாடு செய்தனர். நான்கு மணிநேரம் ஆகியும் அங்கு எந்த அதிசயமும் நிகழவில்லை.
கன்ஷ்யாம் மயங்கியேக் கிடந்தார். தண்ணீர் தெளித்து எழுப்ப முயன்றபோது அசைவற்றுக் கிடந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதியினர் கன்ஷ்யாமை நகோட்டில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த டாக்டர்கள், கன்ஷ்யாம் இறந்துவிட்டதாக கூறினர். இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.