முஷாரப் நாட்டை விட்டு வெளியேற தடை-பாக் அரசு முடிவு
இஸ்லாமாபாத்: அதிபர் பதவியிலிருந்து தானாகவே விலகாவிட்டால் பர்வேஸ் முஷாரப் நாட்டை விட்டு சுதந்திரமாக வெளியேற முடியாது என பாகி்ஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
முஷாரபை காப்பாற்றும் வேலையில் அமெரிக்கா மற்றும் சில மேற்கு நாடுகளின் ஈடுபட்டுள்ளன. நாடாளுமன்றத்தில் முஷாரப் மீது கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்படும் பட்சத்தில் அவர் பதவி நீக்கம் செய்யப்படுவதோடு, குற்றங்களுக்காக கைது செய்யப்படவும் கூடும்.
இதைத் தவிர்க்க அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளின் தூதர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளனர். கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், அவரை கைது செய்யக் கூடாது அவர் சுதந்திரமாக நாட்டை விட்டு வெளியேற அனுமதிக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர்.
இது தொடர்பாக ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரியையும் சந்தித்துப் பேசினர். ஆனால், முஷாரப் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில் தனது கூட்டணிக் கட்சியின் தலைவரான நவாஸ் ஷெரீப் தீவிரமாக உள்ளார், இதனால் முஷாரப் அவ்வளவு சீக்கிரத்தில் தப்ப முடியாது. முஷாரபை காப்பாற்ற நான் முயன்றால் ஆட்சியைக் கவிழ்க்கக் கூட நவாஸ் தயங்க மாட்டார் என தூதர்களிடம் கையை விரித்துவிட்டார் சர்தாரி.
அதே நேரத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்கு முன் தானாகவே மரியாதையாக பதவி விலகினால், அவர் விரும்பும் நாட்டுக்கு ஓடலாம் என்றும் சர்தாரி கூறியுள்ளார்.
இல்லாவிட்டால், அவர் நாட்டை விட்டு வெளியேறவும் தடை விதிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் முஷாரபை காப்பாற்றும் வேலைகளில் ஈடுபடுவதை முதலில் அமெரிக்காவும் மற்ற நாடுகளும் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் சர்தாரி மூலமாக நவாஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே முஷாரபுக்கு துணை நிற்க ராணுவமும் மறுத்துவிட்டதாகத் தெரிகிறது. இந்த விஷயத்தில் ராணுவம் நடுநிலை வகிக்கும் என்றும், முஷாரப் பதவி விலகுவதே நல்லது என்றும் அவரிடம் ராணுவத் தலைமை தெரிவித்துவிட்டது.
முஷாரபை பாகிஸ்தான் ராணுவம் ஆதரித்தால், ராணுவத்தை புஷ் தவிர வேறு யாராலும் காப்பாற்ற முடியாது. விரைவில் பதவிக் காலம் முடியப் போகும் புஷ்ஷை நம்பி அந்த வேலையை ராணுவம் செய்யாது என பாகிஸ்தான் பத்திரிக்கைகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே முஷாரபை புஷ்சும் கூட கைகழுவ ஆரம்பித்துள்ளதாக பத்திரிக்கைகள் கூறுகின்றன. தொலைபேசியில் புஷ்சுடன் பேச முயன்று முஷாரப் பல முறை தோற்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இந் நிலையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா வழங்கிய 1 பில்லியன் டாலரை முஷாரப் சுருட்டிவிட்டதாகவும் புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது குறித்தும் விசாரிக்கப்படும் என சர்தாரி பிரிட்டனின் சண்டே டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அரசாங்கத்தில் மீண்டும் நவாஸ் கட்சி:
இந் நிலையில் முஷாரபை தண்டிக்க சர்தாரி ஒப்புக் கொண்டதால் அவரது கட்சியின் சார்பி்ல் பிரதமராக உள்ள கிலானியி் அமைச்சரவையில் மீண்டும் சேர நவாஸ் கட்சி முன் வந்துள்ளது.
முஷாரப்பை தண்டிக்க சர்தாரி யோசித்ததால் 3 மாதங்களுக்கு முன் ஆட்சியை விட்டு நவாஸ் கட்சி வெளியேறியது குறிப்பிடத்தக்கது.