தெற்கு ஒசேஷிய தலைநகரைப் பிடித்தது ரஷ்யா - தொடரும் தாக்குதல்

ரஷ்ய - ஜார்ஜிய எல்லையில் உள்ள மாகாணமான தெற்கு ஓசேஷியா தற்போது ஜார்ஜியா வசம் உள்ளது. இப்பகுதியை தனி நாடாக அறிவிக்கக் கோரி அங்கு போராட்டம் நடந்து வருகிறது. இந்தப் போராட்டத்திற்கு ரஷ்யா ஆதரவு தருகிறது.
சமீபத்தில் ஒசேஷியாவில் போராட்டம் நடத்தி வரும் அமைப்பினர் அப்பிராந்தியத்தை தனி நாடாக அறிவித்தனர். இதையடுத்து அங்கு ஜார்ஜிய படைகள் குவிக்கப்பட்டு பிரிவினைவாதிகளை ஒடுக்க ஆரம்பித்தது ஜார்ஜியா.
இதையடுத்து களத்தில் குதித்த ரஷ்யா, ஜார்ஜியா மீது விமானத் தாக்குதலை மேற்கொண்டது. வான், கடல், நிலம் என மூன்று வழிகளிலும் ரஷ்யா நடத்திய தாக்குதலால் ஜார்ஜியா திணறிப் போனது. தலைநகர் பிலிசி உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 1500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும் தெற்கு ஒசேஷியாவையும் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில் ஒசேஷியாவின் தலைநகரான ஸ்கின்வாலி நகரையும் ரஷ்யா கைப்பற்றியுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வருவதையொட்டி, ஜார்ஜியா தனது படைகளை ஒசேஷியாவிலிருந்து வாபஸ் பெற ஆரம்பித்துள்ளது. ஆனாலும் ரஷ்யாவின் தாக்குதல் இன்னும் நின்றபாடில்லை.
போர் நிறுத்தத்திற்கும், பேச்சுவார்த்தைக்கும் ஜார்ஜிய அரசு அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து ஜார்ஜிய வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், உடனடி போர் நிறுத்தத்திற்கு ஜார்ஜியா சம்மதிக்கிறது. பேச்சுவார்த்தைக்கும் நாங்கள் சம்மதிக்கிறோம் என்றது.
ஆனால் அதை ரஷ்யா நிராகரித்து விட்டது. மேலும் தனது தெற்கு எல்லையிலிருந்து ஜார்ஜியாவுக்குள் தாக்குதலை நடத்தி வருகிறது.
ஒசேஷியா தவிர ஜார்ஜியாவிடமிருந்து ஏற்கனவே பிரிந்து விட்ட அபஸியா என்ற பகுதியையும் ரஷ்யா பிடிக்க எத்தனித்து வருவதாக ஜார்ஜியா கூறியுள்ளது. ஆனால் அதை ரஷ்யா மறுத்துள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலால் தலைநகர் பிலிசி உள்பட ஜார்ஜியாவின் பல பகுதிகள் பலத்த சேதமடைந்துள்ளன. விமான நிலையங்களும் சேதமடைந்துள்ளன.
ஐ.நா. பாதுகாப்பு சபையில் அமெரிக்கா - ரஷ்யா சண்டை
இந்த நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நேற்று 4வது முறையாக கூடியது. முதல் மூன்று முறையும் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது அமெரிக்க தூதர் சல்மாய் கலீல்ஸாத்துக்கும், ரஷ்ய தூதர் விடாலி சுர்கினுக்கும் இடையே கடும் வாதம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சல்மாய் கூறுகையில், ஜார்ஜிய மக்கள் மீது பயங்கரவாதத்தை திணிக்க முயற்சிக்கிறது ரஷ்யா என்றார்.
இதைக் கேட்டதும் கோபமடைந்த விடாலி சுர்கின் படு சூடாக அமெரிக்காவுக்குப் பதிலடி கொடுத்தார். அவர் பேசுகையில், இது ஏற்றுக் கொள்ளவே முடியாதது. ஈராக், ஆப்கானிஸ்தான், செர்பியாவில் போரை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் ஒரு நாட்டின் பிரதிநிதி வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தைகள் வரக் கூடாது என்றார் படு சூடாக.
இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தக் கூட்டத்திலும் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை.












Click it and Unblock the Notifications