போகாதீர்கள்: இடதுசாரிகளுக்கு கருணாநிதி கோரிக்கை

காங்கிரஸ் இடம்பெற்றுள்ள கூட்டணியில்இடம் பெற மாட்டோம். தமிழகத்திற்கும் இது பொருந்தும் என்று இடதுசாரிகள் அறிவித்துள்ளன. திமுக கூட்டணியிலிருந்து விலகுவது குறித்து வருகிற 25ம் தேதி இறுதி முடிவு எடுக்கப் போவதாக சிபிஎம் மற்றும் சிபிஐ ஆகிய இரு கட்சிகளும் அறிவித்துள்ளன.
இந்த நிலையில் சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி பேசுகையில், திமுக கூட்டணியிலிருந்து இடதுசாரி கட்சிகள் விலக வேண்டாம் என கோரிக்கை விடுத்தார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக ஜனநாயக முற்போக்குக் கூட்டணியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் விலகக் கூடாது. அந்த எண்ணத்தைக் கைவிட வேண்டும்.
நாட்டின் நலனை முன்னிட்டு, அதைக் கருத்தில் கொண்டு அவசரப்பட்டு எந்த முடிவையும் தோழர்கள் எடுத்து விடக் கூடாது. கூட்டணி தீபத்தின் ஜோதியை அணைத்து விடமுயலக் கூடாது.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பான விவகாரத்தில் காங்கிரஸ் அரசுக்கு மத்தியில் ஆதரவை விலக்கிக் கொண்ட இடதுசாரிகள், தமிழகத்தில் காங்கிரஸ் மீது எந்த கோபத்தையும் காட்டவில்லை.
மத்தியில் காங்கிரஸ் மீது உள்ள கோபத்தை, தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் மீது காட்டுவது நியாயமா. அங்கு எடுக்கப்பட்ட முடிவு தமிழகத்திற்கு பொருந்தாது.
இடதுசாரிக் கட்சிகளுக்கும், திமுகவுக்கும் உள்ள தொடர்பு நீண்டது, நெடியது.
யார் யாருடன் சேருவது என்பது இப்போது பிரச்சினை இல்லை. ஆனால், பாபர் மசூதியை இடித்த சக்திகள் மீண்டும் அதிகாரம் பெற்று விடக் கூடாது, உயிர் பெற்று விடக் கூடாது என்பதுதான் இப்போது முக்கியம்.
மதவாத சக்திகளை அடியோடு அழிக்கும் நோக்கில்தான் தமிழகத்தில் ஜனநாயக முற்போக்குக்கூட்டணி உருவாக்கப்பட்டது. இதை இடதுசாரி கட்சிகள் உணர வேண்டும்.
இப்போதுதான் கூட்டணியை பலப்படுத்த வேண்டிய நேரம். அனைவரும் நமது கொள்கைகளில் உறுதியாக இருக்கிறோம் என்பதை நாட்டு மக்களிடம் காட்ட வேண்டும் என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ராஜ்யசபா எம்.பி. டி.கே.ரங்கராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications