எமிரேட்ஸ் இந்திய தொழிலாளர்கள் வேலையிழக்கும் ஆபத்து
துபாய்: துபாய் மற்றும் ஐக்கிய எமிரேட்ஸில் உள்ள சில பகுதிகளில் தானியங்கி பெட்ரோல் நிலையங்களை எமிரேட்ஸ் தேசிய எண்ணை நிறுவனம் அமைக்கத் தொடங்கியுள்ளதால் அவற்றில் பணியாற்றும் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எமிரேட்ஸ் தேசிய எண்ணை நிறுவனம் துபாயில் உள்ள 10 பெட்ரோல் நிலையங்களை தானியங்கி பங்குகளாக மாற்றியுள்ளது. இதனால் அங்கு ஊழியர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். வாகன தாரர்கள் தாங்களே பெட்ரோல், டீசல் போட்டுக் கொண்டு மெஷினில் பணத்தை செலுத்திக் கொள்ள வேண்டும்.
இதேபோல வடக்கு எமிரேட்ஸ் பகுதியில் உள்ள பெட்ரோல், டீசல் பங்குகளையும் தானியங்கி நிலையங்களாக மாற்றப் போகிறது எமிரேட்ஸ் தேசிய எண்ணை நிறுவனம்.
இதனால் இந்த பெட்ரோல் பங்குகளில் பணியாற்றி வரும் இந்தியர்கள் உள்ளிட்ட பல்வேறு நாட்டுத் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து எண்ணை நிறுவன அதிகாரிகள் தெரிவிக்கையில், அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற சுய சேவை பெட்ரோல் விற்பனை நிலையங்கள்தான் அதிகஅளவில் உள்ளன. அதே போன்ற முறையை இங்கும் அறிமுகப்படுத்துகிறோம்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் முழுவதும் சுய சேவை தானியங்கி பெட்ரோல் பங்குகளை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம் என்றனர்.
இருப்பினும் இந்த சுய சேவை எமிரேட்ஸ் மக்களுக்கு புதிது என்பதால் 2 மாதங்ளுக்கு எண்ணை நிறுவன ஊழியர்கள் பெட்ரோல் பங்குகளில் இருப்பார்கள். மக்களுக்கு இந்த சேவை பழகிய பின்னர் அவர்களும் அங்கிருந்து திரும்பப் பெறப்படுவார்கள்.
3 மாதங்களுக்கு இந்த சுய சேவை முறை சோதனை ரீதியாக அமல்படுத்தப்படும். அதன் பின்னர் எமிரேட்ஸ் தேசிய எண்ணை நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கும் இது விரிவுபடுத்தப்படுமாம்.
எண்ணை நிறுவனத்தின் இந்த புதிய முறையால் ஏராளமான இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் கவலையில் மூழ்கியுள்ளனர்.












Click it and Unblock the Notifications