மும்பையில் கட்டட பலி 20ஆக உயர்வு
மும்பை: தெற்கு மும்பை பகுதியில் அடுக்கு மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் இறந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இதில் 8 குழந்தைகளும் பரிதாபமாக இறந்தனர்.
மும்பை உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதில் தெற்கு மும்பையின் பின்தி பஜார் பகுதியில் நான்கு அடுக்கு கட்டடம் உள்ளது. 75 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டடத்தின் 3 மற்றும் 4வது மாடிகளின் ஒரு பகுதி நேற்று திடீரென்று இடிந்து விழுந்தது.
இதில் சிக்கி 6 பேர் இறந்ததாக முதல் கட்ட தகவல் வெளியானது. இடிபாடுகளில் சிக்கியிருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அதில் சிகிச்சை பலனின்றி 8 குழந்தைகள் மற்றும் 6 பெண்கள் பரிதாமாக இறந்தனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.
மீட்பு பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினர். தெற்கு மும்பை பகுதியில் 500 கட்டடங்கள் பழமையாகிவிட்டதால் மோசமான நிலையில் இருப்பதாக கடந்த 2005ம் ஆண்டே எச்சரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது இடிந்துள்ள இந்த கட்டடம் வசிக்க லாயக்கற்றது என்றும் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழக்கூடும் என்றும் வீட்டு வசதி வாரியம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. மேலும் அந்த கட்டடத்தில் வசிப்பவர்களை சீக்கிரம் காலி செய்யும்படி நோட்டீஸூம் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கட்டடம் இடிந்து 20 உயிர்கள் பலியாகியுள்ளன.
சம்பவம் நடந்த இடத்தை அம்மாநில முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் பார்வையிட்டார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000மும் நிவாரணமாக வழங்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications