பழிவாங்கும் தமிழக போலீஸ்-இளைஞர் காங். புகார்
கோவை: தங்களை பழிவாங்குவதாக போலீசார் மீது குற்றம்சாட்டியுள்ளார் தமிழக இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் மயூரா ஜெயக்குமார்.
இதுகுறித்து கோவையில் அவர் கூறியதாவது: அணுசக்தி ஒப்பந்தம் மற்றும் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி இருசக்கர வாகன பேரணியை தமிழகம் முழுவதும் நடத்த திட்டமிட்டோம். கோவையில் எனது தலைமையில் இந்த பேரணி நடப்பதாக இருந்தது. இதுகுறித்து காவல் துறையினருக்கு பத்து நாட்களுக்கு முன்னரே அனுமதி கோரி மனு கொடுத்திருந்தோம்.
காவல் துறையினரும் பேரணிக்கு அனுமதி அளித்தனர்.
ஆனால் திடீரென்று பேரணிக்கு அனுமதி கொடுக்க முடியாது, பேரணி நடத்தக் கூடாது என்று கூறுகின்றனர். இருசக்கர பேரணி நடத்த முடியவில்லை என்றாலும் பரவாயில்லை, நடந்து சென்று, மத்திய அரசின் சாதனை விளக்க பேரணியை நடத்தவாவது அனுமதி கொடுங்கள் என்று கேட்டோம். ஆனால் அதற்கும் காவல் துறையினர் மறுத்து விட்டனர்.
அதையும் மீறி இளைஞர் காங்கிரசார் மத்திய அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் பேரணியாக புறப்பட முயன்றபோது என்னையும், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் உள்பட 500 பேரை போலீசார் கைது செய்தனர். தனிப்பட்ட முறையில் இளைஞர் காங்கிரசார் மீது பழிவாங்கும் நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டுள்ளது என்று அவர் புகார் கூறினார்.












Click it and Unblock the Notifications