ஒகேனக்கல் திட்டமிட்டபடி நிறைவேறும்-துரைமுருகன்
சென்னை: ஒகேனக்கல் குடிநீர் திட்டம் திட்டமிட்டபடி நிறைவேற்றப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார்.
பொதுப் பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு மற்றும் கட்டட அமைப்புகளைச் சேர்ந்த 11 தலைமை இன்ஜினியர்களுக்கு ஏசி பொறுத்தப்பட்ட கார்கள் வழங்கும் விழா உலக வங்கியின் தமிழ்நாடு நீர்வள நிலவள திட்ட அலுவலக்தில் இன்று நடந்தது.
பொதுப் பணித்துறை அமைச்சர் துரைமுருகன் இதில் கலந்து கொண்டார். ரூ.55.30 லட்சம் செலவில் 7 டாடா இண்டிகோ கார்கள் மற்றும் 4 டாடா சுமோ ஜீப்புகளின் சாவிகளை சம்பந்தப்பட்ட ஓட்டுனர்களுக்கு வழங்கினார். பின்னர் பச்சை கொடி அசைத்து புதிய வாகன இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: பொதுப் பணித் துறை இந்த வருடம் 150வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இதையொட்டி, சிறப்பு திட்டமாக 10,000 ஏரிகளில் ஆக்கிரப்புகளை அகற்ற உத்தரவிடப்பட்டுள்ளது. ஏரிகளை ஆக்ரமிக்க கூடாது என்று பலமுறை எச்சரித்தும், மீண்டும் ஆக்ரமிப்புகள் ஏற்படுகின்றன. இந்த சிறப்புத் திட்டத்தின் மூலம் கண்டிப்பான நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒகேனக்கல் குடிநீர் திட்டம், திட்டமிட்டபடி நடக்கும். தர்மபுரி, கிருஷ்ணகிரி மக்களுக்கு குடிநீர் வழங்கப்படும். இத்திட்டத்தினை விவாத பொருளாக்க மாட்டோம் என்று அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications