தூத்துக்குடி: ரூ.75 லட்ச மின்சாரம் திருடிய ஆலை!
தூத்துக்குடி: ஒட்டப்பிடாரத்தில் உள்ள ஒரு தனியார் ஆலையில் ரூ. 75 லட்சம் அளவுக்கு மின்சாரம் திருடப்பட்டுள்ளதை மதுரை மின் திருட்டு தடுப்புப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
தூத்துக்குடி அருகே ஒட்டப்பிடாரத்தில் பெரோ சிலிக்கான் கால்சியம் கார்பைட் தயாரிக்கும் தனியார் ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலைக்கு கடந்த 3 வருடத்திற்கு முன்பு 350 சிவிஏ மின் இணைப்பை மின் வாரியம் கொடுத்தது.
ஆனால், மின் இணைப்பு மூலம் மின்சாரம் பயன்படுத்தாமல் மின்சாரம் திருடப்படுவதாக மின் திருட்டு கண்காணிப்பு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து மதுரை மின் திருட்டு கண்காணிப்பு செயற்பொறியாளர் (பொறுப்பு) அழகப்பன் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அதிரடியாக அந்த ஆலையில் ஆய்வு செய்தனர்.
அப்போது மெயின் பாக்ஸ் மூலம் மின்சாரம் திருடுப்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ. 75 லட்சம் ஆகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தூத்துக்குடி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் ஒட்டப்பிடாரம் போலீஸில் புகார் செய்தார். இதையடுத்து போலீஸார் அந்த ஆலை நிர்வாகி மற்றும் மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications