சுதந்திர தினம்-பாதுகாப்பு வளையத்தில் இந்தியா
டெல்லி: சுதந்திர தினத்தையொட்டி நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தின் கீழ் உள்ளது. தலைநகர் டெல்லி இரும்புக்கோட்டை போல பாதுகாப்பு படையினரால் பாதுகாக்கப்பட்டுள்ளு. டெல்லி நகர எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன.
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக் கூடும் என்ற அச்சத்தால் தலைநகர் டெல்லி பலத்த பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக பிரதமர் மன்மோகன் சிங் உரையாற்றிய செங்கோட்டை பலத்த பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
விமான எதிர்ப்பு பீரங்கிகள் உள்ளிட்டவை நிலை நிறுத்தப்பட்டிருந்தன. 200க்கும் மேற்பட்ட சக்தி வாய்ந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
தலைநகர் டெல்லி முழுவதும் 30 பாரா மிலிட்டரி படையினர் உள்பட 170 கம்பெனி பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இந்திய திபெத்திய எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த கமாண்டோக்கள் மற்றும் தேசிய பாதுகாப்புப் படை கமாண்டோக்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
செங்கோட்டை பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நகர் முழுவதும் ஹெலிகாப்டர் ரோந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சுதந்திர தின விழாவையொட்டி தலைநகரில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டிருந்தது. பல முக்கிய சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.
நேற்று நள்ளிரவு முதல் லாரிகள் உள்ளிட்ட கமர்ஷியல் வாகனங்கள் நுழையத் தடை விதிக்கப்பட்டுள்ளது. வெளி மாநில பேருந்துகள் மட்டுமே டெல்லிக்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உ.பி, ராஜஸ்தான், ஹரியாணா மாநிலங்களையொட்டியுள்ள எல்லைப் பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பகுதிகள் வழியாக செல்லும் மக்கள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
டெல்லி நகரில் உள்ள ஆட்டோ,டாக்சி ஸ்டாண்டுகள், ஓய்வு விடுதிகள் உள்ளிட்டவை தீவிர கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டுள்ளன.
செங்கோட்டைக்கு வரும் மக்கள் கேமராக்கள், பைனாகுலர், கைப்பைகள், சூட்கேஸ்கள், டிரான்சிஸ்டர்கள், சிகரெட் லைட்டர்கள், டிபன் பாக்ஸ்கள், செல்போன்கள் உள்ளிட்டவற்றைக் கொண்டு வர தடை விதிக்கப்பட்டிருந்தது.
டெல்லி தவிர தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications