சோனியாவுக்கு பயங்கரவாதிகளால் ஆபத்து: எப்.பி.ஐ. எச்சரிக்கை
டெல்லி: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உயிருக்கு பயங்கரவாதிகளால் ஆபத்து இருப்பதாக இந்திய உளவுத்துறையை அமெரிக்க உளவு அமைப்பான எப்.பி.ஐ. எச்சரித்துள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் மெரீக் என்ற பகுதியில் வசிக்கும் ஒருவர் சோனியா தொடர்பான ஒரு வெப்சைட்டை நடத்தி வருகிறார். வெப்சைட்டை பார்ப்பவர்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க ஒரு பகுதி உள்ளது. அப்படி கருத்து தெரிவித்தவர்களில் இருவர், சோனியாவை கொல்வோம் என்று மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த வெப்சைட் உரிமையாளர் அமெரிக்க புலனாய்வு நிறுவனமான எப்.பி.ஐ.க்கு தெரிவித்தார். இதையடுத்து இந்திய உளவுத் துறையை உஷாராக இருக்கும்படி எச்சரித்துள்ளது எப்.பி.ஐ. மேலும் பிரதமர் மன்மோகன் சிங்குக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் டிவிஷனல் கமாண்டர் ஒருவர் காஷ்மீரின் தோடா மாவட்ட கமாண்டருக்கு பிறப்பித்துள்ள உத்தரவில், சோனியா அல்லது மன்மோகன் காஷ்மீருக்கு பயணம் செய்யும்போது அவர்கள் வரும் விமானத்தை சுட்டு வீழ்த்துங்கள். குறிப்பாக பாதர்வா பகுதிக்கு வரும்போது இந்த தாக்குதலை நடத்துங்கள் என்று கூறப்பட்டுள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகளின் தாக்குதல் பட்டியலில் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி இடம் பெற்றுள்ளதாகவும், அவரது டெல்லி மற்றும் கொல்கத்தா வீடுகளை தீவிரவாதிகள் நோட்டமிட்டுள்ளதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாய், பாஜக தலைவர் அத்வானி ஆகியோரின் உயிருக்கும் ஆபத்து உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகரில் சீக்கிய பழமைவாதிகளின் கூட்டம் கடந்த ஏப்ரல் மாதம் நடந்ததாகவும், அதில், அத்வானி தனது புத்தகத்தில் சீக்கியர்கள் குறித்து விமர்சித்ததற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக அத்வானி மன்னிப்பு கோரவில்லை என்றால் பயங்கர விளைவுகளை சந்திக்கக் கூடும் என்று எச்சரித்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.