நில மோசடி: ரூ.12 கோடி மோசடியில் கேபிள் டிவி அதிபர்!
சென்னை: கோயில் நிலத்தை அபகரித்த கேபிள் டிவி நிறுவன அதிபர் ஜேக் ஜெயராமன் பற்றி சிபிஐ விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன.
சென்னை ஆவடியைச் சேர்ந்த தொழிலதிபர் ஜெயராமன் என்ற ஜேக் ஜெயராமன். அரசு நிலத்தை அவர் அபகரித்துள்ளதாக சிபிஐக்கு தகவல் கிடைத்தது.
இது குறித்து சிபிஐ டிஐஜி கந்தசாமி, எஸ்.பி. ஹரிவல்சன் தலைமையில் தனிப்படை நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள பனையூர் குப்பத்தில் தேவதை பாண்டியம்மாள் என்ற அம்மன் கோயில் உள்ளது. அந்த கோயிலுக்கு சொந்தமாக 5.93 ஏக்கர் நிலம் உள்ளது.
அதில் 1.87 ஏக்கர் நிலத்துக்கு போலி ஆவணம் தயாரித்து, தனது பெயரிலும் மனைவி அம்சவேணி பெயரிலும் ஜெயராமன் பதிவு செய்துள்ளாராம்.
அந்த நிலத்தின் பேரில் முகப்பேர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 11.90 கோடி ரூபாயை ஜெயராமன் கடன் வாங்கியுள்ளார்.
அதோடு, அம்சவேணி பெயரில் உள்ள நிலத்தில் 26 சென்ட் இடத்தை அமீது மீரான் என்பவருக்கு ரூ.20 லட்சத்துக்கு விற்றுள்ளனர். ஆனால் அந்த இடத்துக்கும் சேர்த்தே கடன் பெற்றுள்ளார் என்று சிபிஐ அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, ஜேக் ஜெயராமன், அம்சவேணி மற்றும் வங்கி அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது.
ஜேக் டிவி எனும் பெயரில் பெரிய அளவில் கேபிள் நெட்வொர்க் வைத்துள்ளார் ஜெயராமன். இவருக்கும் பிரபலமான ஒரு சேனலுக்கும் ஏற்பட்ட மோதலின் விளைவாகவே ஜெயராமனை இந்த விவகாரத்தில் மாட்டிவிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
--












Click it and Unblock the Notifications