இருதய ஆபரேஷன் குழந்தைகள்-கருணாநிதியுடன் சந்திப்பு
சென்னை: அரசின் உதவியால் இருதய அறுவை சிகிச்சை பெற்ற குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் முதல்வர் கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
வறுமைக்கோட்டிற்குக் கீழ் வாழும் ஏழை நோயாளிகள், உயிர் காக்கும் அறுவை சிகிச்சைகளான இருதய அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை, தண்டுவட அறுவை சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சைகளை அங்கீகரிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் செய்து கொள்ள தமிழ்நாடு மாநில நோயாளர் சங்க நிதியிலிருந்து மாவட்ட கலெக்டர்கள் மூலம் தலா ரூ.25,000 நிதியுதவி வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின்மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 5,248 ஏழை நோயாளிகளுக்கு ரூ.13.55 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சுதந்திர தின விழா உரையில் முதல்வர் கருணாநிதி, ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த சிறார்களை இருதய நோய்கள் சிகிச்சைக்கு உதவி வழங்கப்படும்.
தனியார் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்து கொண்டால், மூடிய இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ.10,000, சாதாரண திறந்த இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ,30,000, கடினமான திறந்த இருதய அறுவை சிகிச்சைக்கு ரூ.70,000 நிதியுதவி வழங்க இந்த அரசு முடிவு செய்துள்ளது என்று அறிவித்தார்.
அத்திட்டத்தின்படி அரசு மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சைக்குப் பதிவு செய்து கொண்டுள்ள ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கு, 17 தனியார் மருத்துவமனைகளின் மூலம் இருதய அறுவை சிகிச்சை செய்திடும் சிறுவர்களுக்கு இருதய அறுவைச் சிகிச்சைத் திட்டத்தை முதல்வர் கருணாநிதி கடந்த 21.11.2007 அன்று தொடங்கி வைத்தார்.
இந்தத் திட்டத்தின் மூலம் இதுவரை 294 சிறார்களுக்கு தனியார் மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும், சுமார் நூறு குழந்தைகள் அறுவை சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வரின் 85வது பிறந்த நாளான 3.6.2008 அன்று பள்ளிச் சிறார்கள் இருதய அறுவை சிகிச்சைத் திட்டம் என்ற ஒரு சிறப்புத் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஜூன் மாதம் இறுதி வரை சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய மருத்துவக் குழு பள்ளிகளுக்குச் சென்று பரிசோதனை செய்தனர்.
அப்போது, 9,986 பள்ளி மாணவர்கள் இருதய நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கண்டறியப்பட்டது. அவர்களில் 2 ,396 பேருக்கு இருதய அறுவை சிகிச்சை தேவை என்று மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்தது. அவர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட 17 தனியார் மருத்துவமனைகளில் இருதய அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுவரை 162 பேருக்கு இருதய அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. எஞ்சிய சிறார்களுக்கும் இருதய அறுவை சிகிச்சை செய்ய நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டுள்ளது. ஏழைச் சிறார்களுக்கான இருதய அறுவை சிகிச்சைத் திட்டம் மற்றும் பள்ளிச் சிறார்களுக்கான இருதய அறுவை சிகிச்சைத் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களின் மூலமாக இதுவரை 456 சிறார்களுக்கு வெற்றி கரமாக சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 30 சிறார்களுக்கு இருதய அறுவை சிகிச்சை செய்து முன்னோடியாக விளங்குகிறது. இவர்களில் 11 பேர் தங்கள் பெற்றோருடன், முதல்வர் கருணாநிதியை தலைமைச் செயலகத்தில் இன்று சந்தித்து மகிழ்ச்சியுடன் நன்றியைத் தெரிவித்தனர். சிறார்களுக்கு கருணாநிதி வாழ்த்து தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications