மீனவர்கள் மீது தாக்குதல்: இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேஸ்வரம்: நடுக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை தாக்கி அட்டூழியம் செய்துள்ளது இலங்கை கடற்படை.
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தி வரும் தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. இதற்கு பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் கொழும்பு சென்றபோது அந்நாட்டு அதிபர் ராஜபக்சேவுடன் பேசி பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இலங்கை கடற்படையினரின் அட்டகாசம் குறைந்தபாடில்லை.
நேற்று 651 விசைப் படகுகள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றன. மொத்தம் 2604 மீனவர்கள் படகுகளில் இருந்தனர். அப்போது சில மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டி மீன் பிடித்தனர்.
அந்த சமயத்தில், இலங்கை கடற்படையினர்அங்கு வந்தனர். வானை நோக்கிய துப்பாக்கியால் சுட்டபடி வந்த அவர்கள், தமிழக மீனவர்களின் நான்கு படகுகளில் இறங்கி துப்பாக்கியைக் காட்டி மீனவர்களை மிரட்டினர். பின்னர் வலைகள், பேட்டரிகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தினர். மீன்களையும் கடலில் தூக்கிப் போட்டனர்.
பின்னர் தமிழக மீனவர்களை எச்சரித்து விட்டு திரும்பிச் சென்றனர். பயந்து போன மீனவர்கள் பலர் மீன் பிடிப்பதை விட்டு விட்டு கரைக்குத் திரும்பினர். இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரிகளிடம் புகார் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications