விருதுநகர் தொழிலதிபர் கடத்தல்-அழகிரி ஆதரவாளர்கள் மீது புகார்
சென்னை: விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் கடத்தப்பட்டார். அவருடைய கார், நகை ஆகியவை பறிமுதல் செய்யபப்ட்டது. ரூ. 20 லட்சம் பணமும் கேட்டுள்ளனர் கடத்தல்காரர்கள். இந்த விவகாரத்தில் அழகிரி ஆதரவாளர்களின் பெயர் அடிபடுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் விளாம்பட்டியைச் சேர்ந்தவர் எஸ்.பி. செண்பகதீர்த்தம். இவர் முன்னாள் அதிமுககாரர். இவருக்கு சொந்தமாக சிவகாசியில் அச்சகம், மருந்துகடை, இரும்புகடை, டிராவல்ஸ் நிறுவனம் உள்ளிட்டவை உள்ளன.
இன்று இவர் சென்னை கூடுதல் டிஜிபி அலுவலகத்திற்கு வந்தார். அங்கு ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அதில், ஜூலை மாதம் 15ம் தேதி நான் காரில் சென்று கொண்டிருக்கும் போது மிசா செந்தில் மற்றும் அவரது அடியாட்கள் 3 கார்களில் வந்து என்னுடைய காரை மடக்கினார்கள்.
என்னுடன் வந்தவர்களை தாக்கி விட்டு என் கண்களை கட்டி என்னுடைய காரிலேயே கடத்தி சென்றார்கள். போகும் வழியில் நான் அணிந்திருந்த 30 சவரன் மதிப்புள்ள தங்க மோதிரம், பிரேஸ்லெட், தங்க அரைஞாண் ஆகியவற்றை பறித்து கொண்டனர். என்னை புதுக் கோட்டைக்கு கடத்தி சென்றார்கள்.
10 லட்சரூபாய் கொடுத்தால்தான் என்னை விடுவிப்பேன் என்றனர். இதையடுத்து எனது நண்பர் மூலமாக 3 லட்சம் ரூபாய் கொடுத்தேன்.
இதைத் தொடர்ந்து விருதுநகரில் உள்ள என்னுடைய வீட்டை அவர்கள் பேருக்கு எழுதி தருமாறு துப்பாக்கி முனையில் மிரட்டினார்கள். மேலும் என்னுடைய விலை உயர்ந்த காரையும் எடுத்து சென்று விட்டார்கள். மீண்டும் 3 லட்ச ரூபாய் கொடுத்த பிறகு கடந்த 19ந் தேதிதான் என்னை விடுவித்தார்கள்.
தற்போது நான் தலைமறைவாக இருக்கிறேன். உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்த போது அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. தற்போது 20 லட்ச ரூபாய் கொடுக்காவிட்டால் என்னையும், என் குடும்பத்தையும் தீர்த்து கட்டிவிடுவதாக மிரட்டுகிறார்கள்.
மு.க. அழகிரியின் தூண்டுதலின் பேரில் இது நடைபெற்றுள்ளது.
அடியாட்களை வைத்து மிரட்டிய என்.கே.கே.பி. ராஜா மந்திரி பதவியில் இருந்து விலக்கப்பட்டதால் என் பிரச்சனையிலும் நடவடிக்கை இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டு தான் தற்போது புகார் கொடுத்திருக்கிறேன்.
மனித உரிமை ஆணையத்திலும் புகார் கொடுத்திருக்கிறேன். காவல் துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications