49 குழந்தைகள் பலி: விசாரணை நடத்த எய்ம்ஸுக்கு அரசு உத்தரவு
டெல்லி: டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழக மருத்துவமனையில் (எய்ம்ஸ்) மருத்துவப் பரிசோதனைகளின்போது 49 குழந்தைகள் இறந்தது குறித்து விரிவான விசாரணை நடத்துமாறு மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி உத்தரவிட்டுள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸுக்கும், எய்ம்ஸ் இயக்குநராக இருந்த டாக்டர் வேணுகோபாலுக்கும் இடையே கடும் பனிப்போர் நடந்து வந்தது. இதில் வேணுகோபாலுக்கு சாதகமாக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து பனிப்போர் ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
இந்த நிலையில் மீண்டும் எய்ம்ஸ் விவகாரத்தை கையில் எடுத்துள்ளது மத்திய சுகாதாரத் துறை. எய்ம்ஸ் மருத்துவமனையில், கடந்த காலங்களில் மருத்துவப் பரிசோதனையின்போது 49 குழந்தைகள் பலியானது குறித்து விசாரணை நடத்த மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை செயலாளர் நரேஷ் தயாள் செய்தியாளர்களிடம் கூறுகையில், இதுகுறித்த விவகாரம் எய்ம்ஸ் ஆட்சிக் குழு விவாதத்திற்கு வந்தது. இதையடுத்து இதுகுறித்து விரிவாக விசாரணை நடத்தி விரைவாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ், எய்ம்ஸ் இயக்குநருக்கு உத்தரவிட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
ஆனால், மருத்துவப் பரிசோதனையின்போது இந்தக் குழந்தைகள் இறக்கவில்லை. மாறாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இயற்கையான முறையில்தான் இறந்தனர். கொடுக்கப்பட்ட மருந்து சேராமல் இவர்கள் இறக்கவில்லை என்று எய்ம்ஸ் நிர்வாகம் மறுத்துள்ளது.
இதுகுறித்து எய்ம்ஸ் மருத்துவமனையின் குழந்தைகள் நலப் பிரிவு தலைவர் டாக்டர் வி.கே.பால் கூறுகையில், எங்களிடம் உள்ள டேட்டாக்களின்படி இந்தக் குழந்தைகளில் யாரும் கொடுக்கப்பட்ட மருந்து ஒத்துக் கொள்ளாமல் இறக்கவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தக் குழந்தைகளில் சிலருக்கு சோதனை ரீதியிலான சில மருந்துகளும், மற்றவர்களுக்கு வழக்கமான மருந்துகளும் தரப்பட்டன என்றார் பால்.
ஏற்கனவே இந்த விவகாரம் தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் எய்ம்ஸிடம் விளக்கம் கேட்கப்பட்டிருந்தது. அதற்கு எய்ம்ஸ் அளித்த விளக்கத்தில், கடந்த இரண்டரை ஆண்டு காலத்தில் புதிய மருந்துகள் கொடுக்கப்பட்டதில் 49 குழந்தைகள் இறந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
2006ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் எய்ம்ஸ் மருத்துவமனையில் மொத்தம் 4142 குழந்தைகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 2728 பேர் ஒரு வயதுக்கும் குறைவானவர்கள் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் என இடதுசாரிகள், காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கோரிக்கை விடுத்திருந்தன என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications