ரெட்டணை-போலீஸ் வெளியேற சிபிஎம் கோரிக்கை
விழுப்புரம்: ரெட்டணை கிராமத்திலிருந்து காவல்துறை உடனே வெளியேற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் ரெட்டணை கிராமத்தில் தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் கூலி வழங்கப்படுவது தொடர்பாக மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். போலீஸார் அவர்கள் மீது தடியடி மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ரெட்டணை சிபிஎம் ஊராட்சி மன்ற தலைவர் கலைச்செல்வன் உள்பட 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்பி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் ஜி.ஆனந்தன் ஆகியோர் தலைமையிலான மார்க்சிஸ்ட் கட்சியினர் ரெட்டனை கிராமத்திற்கு நேரில் சென்றனர். சம்பவம் குறித்து மக்களிடம் விசாரித்தனர்ணை நடத்தினர்.
பின்னர் அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:
வேலை உறுதியளிப்பு திட்டத்திஸ் ரூ.80 கூலியாக தர வேண்டும் என்று கோரி தொழிலாளர்கள் அமைதியான முறையில் சாலை மறியல் செய்தனர். அங்கு வந்த அதிரடிப்படையும், காவல் துறையினரும் எந்த வித எச்சரிக்கையுமின்றி, காட்டு மிராண்டித்தனமாக சிபிஎம் ஊராட்சிமன்ற தலைவர் கலைச்செல்வன், அவரது சகோதரர் சட்டக் கல்லூரி மாணவர் தமிழரசு, முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் ராமலிங்கம் உள்பட மறியல் செய்த மக்களை கடுமையாகத் தாக்கியதோடு துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.
இதில்மூர்த்தி என்ற இளைஞருக்கு முதுகில் குண்டுபாய்ந்து புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இத் தாக்குதலில் சில பெண்களுக்கு எலும்பு முறிவும் ஏற்பட்டுள்ளது. சுமார் 25 பேர், காவல்துறை யினர் நடத்திய தடியடியில் காயமடைந்துள்ளனர்.
சட்டப்படி கூலி கேட்ட விவசாயத் தொழிலாளர்களுடன் வருவாய்த்துறை அதிகாரிகள் முறையாக அணுகி பேச்சுவார்த்தை நடத்தியிருந்தால் எந்த வித அசம்பாவிதமும் நடந்திருக்காது.
வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினரின் அத்துமீறலினால்தான் தடியடி, துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த நடவடிக்கையை வன்மையாக கண்டிக்கிறோம். போலீசாரின் துப்பாக்கி சூடு மற்றும் தடியடித் தாக்குதலில் காயமடைந்த அனைவருக்கும் அரசு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
இந்த அசம்பாவிதத்திற்கு காரணமான திண்டிவனம் தாசில்தார் மற்றும் பெரிய தச்சூர் காவல்துறை உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்பாவி மக்கள் தொடரப்பட்டுள்ள பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும். ரெட்டனை கிராமத்திலிருந்து காவல் துறையினரை உடனே விலக்கி கொள்ள வேண்டும்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஆர்டிஒ அளவிலான விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பது ஏமாற்றம் அளிக்கிறது. நீதிபதி தலைமையிலான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 25 மற்றும் 26ம் தேதிகளில் தாசில்தார் அலுவலகம் முன் கண்டன ஆர்பாட்டம் நடத்தப்படும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications