நாங்கள் வியாதிக்காரர்கள் என்றால் ஜெ. பெரு வியாதிக்காரரா? விஜயகாந்த்
சென்னை: அரசியலில் நுழைந்துள்ள தமிழக நடிகர்கள் வியாதிக்காரர்கள் என்றால் ஜெயலலிதா பெரு வியாதிக்காரரா என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் காட்டமாக கேட்டுள்ளார்.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா, சிரஞ்சீவியின் அரசியல் பிரவேசம் குறித்து கூறுகையில், தமிழகத்தை பீடித்துள்ள வியாதி (நடிகர்கள் அரசியலுக்கு வருவதை அப்படிக் குறிப்பிட்டார்) இப்போது ஆந்திராவுக்கும் பரவி விட்டது என்று கூறியிருந்தார்.
இதற்கு விஜயகாந்த் படு காட்டமாக பதிலளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி அரசியலில் நுழைவது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெய லலிதா, தமிழகத்திற்கு பிடித்திருந்த வியாதி ஆந்திராவுக்கும் பரவியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் எல்லாம் வியாதிக்காரர்கள் என்றால் நீங்கள் பெருவியாதிக் காரரா?.
சேது திட்டம் நாசமாக போய் விட்டது:
சேது சமுத்திர திட்டம் முழுக்க முழுக்க நாசமாக போவதற்கு காரணம் தமிழக முதல்வர் கருணாநிதிதான். இதுவரை 2500 கோடிக்கும் மேல் செலவு செய்துள்ள நிலையில், மாற்று பாதையில் அமைந்தாலும் பரவா யில்லை என்று கூறினால், செலவு செய்த தொகை யாருடைய பணம்? மக்களுடைய வரிப்பணம் அல்லவா?
திமுக அமைச்சரவையில் ஒவ்வொரு மந்திரி மீதும் நாளொரு மேனியும், பொழுதொரு குற்றமுமாக வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டை சேர்ந்த ஒருவரின் துணிச்சலான புகாரை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களும் மெல்ல மெல்ல புகார் அளிக்க வருவார்கள். அப்போது தெரியும் திமுகவின் ஒட்டு மொத்த சுயரூபம்.
இதுதான் ஊக்கம் வளர்ந்த விதமா?:
குளச்சலில் நடைபெற்ற கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் பேசுகிறார். தமிழகத்தின் வளர்ச்சி விகிதம் 10.2 சதவிகிதம், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் 8.5 சதவிகிதம் என்று.
அது எப்படி இந்தியாவின் வளர்ச்சியை விட தமிழகத்தின் வளர்ச்சி அதிகமாக இருக்கும். இதுதான் ஊக்கம் வளர்ந்த விதமா?
ரஜினியை வரச் சொன்னது யார்?:
ஒகேனக்கல் விவகாரத்தில் ரஜினிகாந்தை அந்த மேடையில் அமர சொன்னது யார்? அதனால் ஆதாயம் தேட நினைத்தது யார்? இப்போது பிரச்சனை என்று வந்த பிறகு எதுவும் பேசாமல் அமைதி காப்பது யார்? என்பது மக்களுக்கு தெரியும். அதை பற்றி நான் பேச விரும்பவில்லை.
திமுகவின் உறுப்பினர் அட்டை இருந்தால் தமிழக அரசின் கேபிள் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் இருக்க முடியும். தேர்தலில் கூட்டணி என்பது குறித்தோ, இல்லை என்பது குறித்தோ இப்போது எதுவும் பேச முடியாது. தேர்தல் சமயத்தில் மட்டும்தான் பேச முடியும். நாளையே தேர்தல் என்றால் கூட அதனை சந்திக்க தேமுதிக தயார் என்றார் விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications