விஜேந்தர் குமார் அபார வெற்றி - இந்தியாவுக்கு 3வது பதக்கம் உறுதி!

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் இன்று இந்தியாவுக்கு இனிப்பும், கசப்பும் கலந்த நாள். பிற்பகலில் சுஷில்குமார் வெண்கலம் வென்று இந்தியர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தார்.
இதையடுத்து மாலையில் நடந்த குத்துச் சண்டைப் போட்டியில் ஜிதேந்தர் குமார் தோல்வியுற்று ஏமாற்றத்தை அளித்தார்.
ஆடவர் மிடில் வெயிட் 51 கிலோ எடைப் பிரிவுகாலிறுதி போட்டியில் ரஷ்ய வீரர் ஜார்ஜி பாலஷினுடன் மோதினார் ஜிதேந்தர் குமார். இதில் அவர் 11-15 என்ற கணக்கில் தோல்வியுற்றார்.
இதையடுத்து 75 கிலோ எடைப் பிரிவில் காலிறுதியில் நுழைந்த விஜேந்தர் குமார் மீது பார்வை திரும்பியது. அந்த எதிர்பார்ப்பை அருமையாக நிறைவேற்றி இந்தியாவுக்கு 3வது பதக்கத்தை உறுதி செய்து விட்டார் விஜேந்தர்.
இன்று மாலை நடைபெற்ற விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியில் ஈகுவடார் வீரர் கார்லோஸ் காங்கோராவுடன் மோதினார் விஜேந்தர். பரபரப்பாக நடந்த இந்தப் போட்டியில் 9-4 என்ற கணக்கில் அபார வெற்றியைப் பெற்று சாதனை படைத்தார் விஜேந்தர்.
இந்த வெற்றியின் மூலம் விஜேந்தர் குமார் அரை இறுதிக்குள் நுழைந்துள்ளார். அரை இறுதியில் நுழைந்துள்ளதன் மூலம் இந்தியாவுக்கு நிச்சயம் ஒரு பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
அரை இறுதியில் வெற்றி பெற்றால் தங்கம் அல்லது வெள்ளிக்கு முயலலாம். தோற்றால் வெண்கலப் பதக்கம் உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வெற்றியின் மூலம் இந்தியாவுக்கு பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் 3வது பதக்கம் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு விட்டது. ஒலிம்பிக் வரலாற்றிலேயே இந்தியா முதல் முறையாக தனி நபர் பிரிவுகளில் 3 பதக்கங்களை வெல்வது இதுவே முதல் முறை என்பதால் நாடே உற்சாகத்தில் மூழ்கியுள்ளது.
தங்கமே இலக்கு - விஜேந்தர்
தனது வெற்றி குறித்து போட்டியின் முடிவில் விஜேந்தர் குமார் கூறுகையில், அரை இறுதிக்குள் நுழைந்துள்ள மகிழ்ச்சி அளிக்கிறது. ஒவ்வொரு இந்தியரின் வெற்றியுமாகும் இது. ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் இதை அர்ப்பணிக்கிறேன்.
எனது இலக்கு வெண்கலப் பதக்கமோ, வெள்ளியோ அல்ல. தங்கப் பதக்கத்தை வெல்லவே விரும்புகிறேன். நிச்சயம் வெல்வேன் என்ற நம்பிக்ைக உள்ளது என்றார் மகிழ்ச்சியுடன்.
இந்திய விளையாட்டுத்துறைக்கு இன்னாள் மிகப் பெரிய பொன்னாள் என்பதில் சந்தேகம் இல்லை.












Click it and Unblock the Notifications