தமிழகத்திற்கு சொந்தமானது ஒகனேக்கல்-திரிபாதி
சென்னை: தமிழகத்திற்குட்பட்ட பகுதிதான் ஒகனேக்கல். இதில் தேவையில்லாமல் சில அரசியல் கட்சிகள் குழப்பத்தை ஏற்படுத்தப் பார்க்கின்றன என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள ஜப்பான் தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரிபாதி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒகனேக்கல் பகுதி, தமிழகத்துக்கே சொந்தம். இதனை அழுத்தம் திருத்தமாக சொல்ல வேண்டியது என் கடமை. இதில் சந்தேகத்துக்கே இடமில்லை. இதற்கான ஆதாரங்கள் நம்மிடம் தெளிவாக உள்ளன.
ஒகனேக்கல் குடிநீர்த் திட்டம் அவசர கதியில் நிறைவேற்றப்படவில்லை. தமிழக பகுதியில் ஓடும் காவிரி நதியில் இருந்து 1.4 டி.எம்.சி. நீரை எடுத்து இரண்டு மாவட்டங்களில் வசிக்கும் 30 லட்சம் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவே இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சில பத்திரிகைகளும், அரசியல் கட்சிகளும் இந்த விஷயத்தை தேவைக்கு அதிகமாக ஊதி பெரிதாக்குகிறார்கள். திட்டமிட்டபடி ஒகனேக்கல் குடிநீர்த் திட்டம் குறித்த காலத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்படும்.
இந்த திட்டத்துக்கு ஜப்பான் நிதி உதவி அளித்திருப்பதன் மூலம், இருநாடுகளுக்கு இடையிலான உறவு நன்கு பலப்பட்டிருக்கிறது. மெட்ரோ ரெயில் திட்டத்துக்கும் ஜப்பான் நிதி உதவி செய்கிறது. அவர்களுக்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என்றார் திரிபாதி.












Click it and Unblock the Notifications