தேர்தலில் கம்யூ. கட்சிகள் காணாமல் போய் விடுவார்கள்: ஆற்காடு வீராசாமி
சென்னை: அணு சக்தி ஒப்பத்தை எதிர்த்து நம்பிக்கை வாக்கெடுப்பில் வாக்களித்த கட்சிகள் வரும் லோக்சபா தேர்தலில் காணாமல் போய் விடுவார்கள் என்று மாநில மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் திமுகவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையே மோதல் மூண்டுள்ளது. காங்கிரஸ் கூட்டணியிலிருந்து திமுக வர வேண்டும். இல்லாவிட்டால் கூட்டணியை மறு பரிசீலனை செய்வோம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் சில வாரங்களுக்கு முன்பு அறிவித்தனர். இதுகுறித்து 25ம்தேதி அவர்கள் தங்களது முடிவை அறிவிக்கவுள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முதல்வர் கருணாநிதி பூடகமாக பிராமண சமுதாயத்தைச் சேர்ந்த ஒரு தலைவரை விமர்சித்து கவிதை எழுதியிருந்தார். இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜனை மனதில் கொண்டு எழுதப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்த சூழ்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக சாடி மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி விமர்சித்துப் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜீவ்காந்தி பிறந்த நாள் விழாவையொட்டி நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் ஆற்காடு வீராசாமி பேசுகையில், கம்யூனிஸ்ட் கட்சிகளை கடுமையாக சாடினார்.
அவர் பேசுகையில், அனல் மின்சாரத்தை நம்பினால் நமது நாடு முன்னேற முடியாது. அதனால்தான் அணு சக்தி ஒப்பந்த திட்டம் அறிவிக்கப்பட்டது. அதற்கு கம்யூனிஸ்டுகளும், மதவாத சக்திகளும் குறை சொன்னார்கள்.
அணு சக்தி இருந்தால்தான் மின் உற்பத்தியை 4 லட்சம் மெகாவாட்டாக உயர்த்த முடியும். 2 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்திக்கு 1998ம் ஆண்டு கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு ரஷ்யாவுடன் ஒப்பந்தம் போடப்பட்டது.
கட்டடம் கட்டி முடித்தும், இயந்திரங்கள் அனைத்தும் வைக்கப்பட்டும் மின் உற்பத்தி தொடங்கவில்லை. காரணம் யுரேனியம் இல்லாததுான். 2009ம் ஆண்டு பிப்ரவரியில் 1000 மெகாவாட்டும், டிசம்பர் மாதம் 1000 மெகாகவாட்டும் மின்உற்பத்தி செய்வதாக கூறியருக்கிறார்கள்.
கம்யூ. பத்தாம் பசலிகள்:
ரஷ்யாவில் இருந்து வந்தால் மின் உற்பத்தி செய்யலாம். அமெரிக்காவிலிருந்து வந்தால் செய்யக் கூடாதா. கம்யூனிஸ்டுகள் போகாத ஊருக்கு வழி காட்டுபவர்கள். இது பத்தாம் பசலித்தனம். இப்படி இருந்தால் இந்தியா முன்னேற முடியாது. இந்தியா முன்னேற உங்கள் எதிர்காலம் பற்றி சிந்திக்கும் இயக்கம் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் இது. அணு மின்சக்தி வந்தால்தான் இந்தியாவை காப்பாற்ற முடியும்.
அணு சக்தி ஒப்பந்தத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் வாக்களித்தவர்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காணாமல் போய் விடுவார்கள். அவர்கள் தற்போது வாங்கிய சீட்களை விடவும் குறைந்த சீட்களையே பெறுவார்கள் என்றார் ஆற்காடு வீராசாமி.
கம்யூனிஸ்ட் கட்சிகள்தான் அணு சக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். அவர்கள் வரும் தேர்தலில் காணாமல் போய் விடுவார்கள் என்று முதல்வர் கருணாநிதியின் நிழலான ஆற்காடு வீராசாமி காட்டமாக கூறியிருப்பது திமுகவுக்கும், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் இடையிலான உறவு முடிவுக்கு வரப் போவதை உணர்த்துவதாக உள்ளதாக கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications