பல்கலை கேன்டீன் சூறை-தேமுதிக பிரமுகர் கைது
சிதம்பரம்: சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனை கேன்டீனை சூறையாடிய தேமுதிக பிரமுகர் கைது செய்யப்பட்டார். அவரது ஆதரவாளர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
சிதம்பரம் அண்ணாமலை நகர் பேரூராட்சி தலைவியாக இருப்பவர் கீதா. இவரது கணவர் கலியமூர்த்தி (37), தேமுதிக பிரமுகர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அண்ணாமலை நகரில் கொலை செய்யப்பட்ட பல்கலைக்கழக துணை வேந்தர் அலுவலக ஊழியர் சிவசாமியிடம் வேலைக்காக பணம் கொடுத்தாக கூறப்படுகிறது.
கொலை செய்யப்பட்ட சிவசாமியின் அண்ணன் மகன் பாண்டியன் அண்ணாமலை பல்கலைகழக மருத்துவமனை வளாகத்தில் கேன்டீன் நடத்தி வருகிறார். இந்நிலையில் சிவசாமியிடம், தான் கொடுத்த பணத்தை திரும்ப தரும்படி பாண்டியனிடம், கலியமூர்த்தி கேட்டுள்ளார். அதற்கு தனக்கும் இதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறி பணம் தர பாண்டியன் மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரம் அடைந்த கலியமூர்த்தி மற்றும் அவரது ஆதரவாளர்கள் கணேசன், ராஜா, கபாலி, உள்பட சுமார் 7 பேர் பயங்கர ஆயுதங்களுடன் அண்ணாமலை பல்கலைகழகத்தில் உள்ள பாண்டியனின் கேன்டீனை திடீரென அடித்து நொறுக்கி சூறையாடினர்.
இதுகுறித்து அண்ணாமலை நகர் காவல் நிலையத்தில் பாண்டியன் புகார் செய்தார். போலீஸார் வழக்குப் பதிவு செய்து கலியமூர்த்தியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது ஆதரவாளர்கள் கணேசன், ராஜா, கபாலி, உள்பட சுமார் 6 பேரை தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications