மாப்பிள்ளைக்கு 'எச்.ஐ.வி' - நின்று போன கல்யாணம்!
தேனி: தேனியில் கல்யாணம் நடக்கவிருந்த நேரத்தில், மாப்பிள்ளைக்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பது தெரிய வந்ததால் கடைசி நேரத்தில் கல்யாணம் நின்று போனது.
தேனி சின்னமனூரில் உள்ள மறவர் மன்றத்தில், செல்வம் என்பவருக்கு நேற்று திருமணம் நடப்பதாக இருந்தது. இந்த கல்யாண மண்டபத்தில் ஒரு விதிமுறை உள்ளது. அதாவது, மாப்பிள்ளைக்கும், பெண்ணுக்கும் எச்.ஐ.வி. பரிசோதனை செய்து அதன் மருத்துவ சான்றிதழை மண்டபத்தில் கொடுக்க வேண்டும். இருவருக்கும் எச்.ஐ.வி. இல்லாவிட்டால் மட்டுமே கல்யாணம் நடத்த அனுமதி அளிக்கப்படும்.
அந்த விதிமுறைப்படி செல்வத்திற்கும், அவருக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த பெண்ணுக்கும் தேனி அரசு மருத்துவமனையில் எச்.ஐ.வி. பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று காலை கிடைத்தன.
அதில் செல்வத்திற்கு எச்.ஐ.வி. பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் கல்யாணத்தை நடத்த அனுமதிக்க முடியாது என்று மண்டப நிர்வாகிகள் தெரிவித்து விட்டனர். இதனால் கல்யாணம் நின்று போனது.
கல்யாண மண்டபத்தின் இந்த விதிமுறையால் எங்கள் வீட்டுப் பெண்ணின் வாழ்க்கை தப்பியது என்று மண்டப நிர்வாகிகளை வாழ்த்தி விட்டு மணமகள் வீட்டார் திரும்பிச் சென்றனர். மணமகன் வீட்டாரோ அதிர்ச்சியுடன் வீடு திரும்பினர்.












Click it and Unblock the Notifications