டீசல் பஞ்சம்: ஐடி நிறுவனங்களால் தேவை அதிகரிப்பு - திரிபாதி
சென்னை: தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் பெருக்கம் காரணமாக டீசலின் தேவை 35 சதவீதம் அதிகரித்து விட்டது. இதுவும் டீசல் பற்றாக்குறைக்கு முக்கிய காரணம் என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி தெரிவித்துள்ளார்.
டீசல் பஞ்சம் மீண்டும் தமிழகத்தை ஆட்டிப்படைக்க ஆரம்பித்திருக்கிறது. சென்னையில் கடந்த ஐந்து நாட்களாக டீசல் விற்பனை படு மோசமாக உள்ளது. சென்னை தவிரதமிழகத்தின் பிற நகரங்களுக்கும் இந்த பற்றாக்குறை பரவி வருகிறது.
இதனால் தூத்துக்குடியில் மீன் பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் நேற்று எண்ணை நிறுவனங்களின் அதிகாரிகளுடன் தலைமைச் செயலாளர் திரிபாதி அவசர ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், 3 அரசு எண்ணை நிறுவனங்கள், சாப்ட்வேர் நிறுவனங்கள், ஜவுளி நிறுவனங்களை அழைத்துப் பேசியுள்ளோம். டீசல் தட்டுப்பாட்டை சரி செய்வதாக அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
20ம் தேதி நடந்த அகில இந்திய பொது வேலைநிறுத்தம் காரணமாக சில இடங்களிலிருந்து டீசல் வருவது தடைபட்டதாகவும், தட்டுப்பாட்டைப் போக்கும் அளவுக்கு டீசல் சப்ளைசெய்வதாகவும் எண்ணை நிறுவனங்கள் ெதரிவித்துள்ளன.
தமிழகத்தில் டீசல் தேவை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 35 சதவீதம் உயர்ந்துள்ளது. ஐடி நிறுவனங்கள் பெருகியதே இதற்குக் காரணம். அவர்கள் வாரம் முழுவதும் 24 மணி நேரமும் டீசலை பயன்படுத்துகின்றனர்.
ஐடி நிறுவனங்களுக்கு குறைந்த விலையில் டீசல் தருவதாக கூறப்படுவது தவறு. மார்க்கெட் விலைக்கே அவர்களுக்கு டீசல் தரப்படுகிறது. ஐடி நிறுவனங்களிடம் டீசல் பயன்பாட்டைக் குறைக்குமாறு கூறினால், தமிழக அரசு ஊக்கப்படுத்தியதால்தான் இங்கு தொழில் தொடங்கினோம்.
நாங்கள் 10 ஆயிரம் பேருக்கு வேலை தந்திருக்கிறோம் என்றெல்லாம் சொல்கிறார்கள்.
தொழில் வளர்ச்சியின்போது இதெல்லாம் ஏற்படுவது சகஜம். அவற்றை சமாளித்தே ஆக வேண்டும். அதனால் ஐடி நிறுவனங்களை மட்டும் விட்டு விட்டு மற்ற விதங்களில் டீசல் பயன்பாட்டை குறைப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
நாட்டில் மற்ற மாநிலங்களுக்கு கொடுக்கப்படும் டீசலை விட தமிழகத்தின் தேவை மிகவும் அதிகரித்திருக்கிறது. இந்த பிரச்சினை பற்றியெல்லாம் மத்திய அரசிடம் பேசி தமிழகத்திற்கு அதிக டீசலை ஒதுக்கித் தரும்படி கேட்போம்.
மின்சார தேவை இப்போது கட்டுக்குள் உள்ளது. தற்போது 700 முதல் 800 மெககாவாட் மின்சாரம் மட்டுமே தேவை. மற்ற மாநிலங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இங்கு மின் தட்டுப்பாடு மிகவும் குறைவாகவே உள்ளது. தற்போது மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதனால் மின் உற்பத்தி அதிகரிக்கும். ஜெனரேட்டர் பயன்பாடு குறையும். இதன் மூலம் டீசல் பயன்பாடு பெருமளவில் குறையும்.
தமிழகத்தில் 18.50 லட்சம் பம்புசெட்டுகள் உள்ளன. இவற்றில் 14 லட்சம் பம்புசெட்டுகள் எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கின்றன. மின்சாரம் தடைபடும்போது இவர்கள் டீசல் பயன்படுத்துகிறார்கள். இது தமிழகத்தின் ஒட்டு மொத்த தேவையில் மிகவும் சிறிய பகுதியே ஆகும். அதுவும் மழை பெய்தால் பம்புசெட்டுகளின் பயன்பாடும் குறைந்து விடும்.
2009ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கூடங்குளம் அணு மின் நிலையத்தின் முதல் யூனிட்டில் பணிகள் தொடங்கி விடும். அங்கு கிடைக்கும் 1000 மெகாவாட் மின்சாரத்தில் நமக்கு 463 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். 2வது யூனிட்டின் செயல்பாடு தொடங்கினால் மேலும் 463 மெகாவாட் கிடைக்கும். அப்போது மின் பற்றாக்குறை சரியாகி விடும் என்றார் திரிபாதி.












Click it and Unblock the Notifications