தேனியில் போலீஸ் வேட்டை-துப்பாக்கிகள் சிக்கின
தேனி: நக்சலைட் பாதிப்புக்குள்ளாகியுள்ள தேனி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் நடந்த வேட்டையில், எட்டு நாட்டு துப்பாக்கிகள் மற்றும் 2 ரிவால்வர்கள் சிக்கியுள்ளன. இதுதொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனியில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் புழங்கி வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தேனி மாவட்ட போலீஸார், கியூ பிரிவு போலீஸாருடன் இணைந்து இந்த வேட்டையில் ஈடுபட்டனர்.
கைது செய்யப்பட்ட 11 பேருக்கும் நக்சலைட்டுகளுடன் தொடர்பு இருக்கிறதா என்பதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். எப்படி இவர்களுக்கு இந்த ஆயுதங்கள் கிடைத்தன என்பது குறித்தும் விசாரணை நடைபெறுகிறது.
மேலும், வருசநாடு, முருகமலை வனப் பகுதிகளில் போலீஸாரின் தேடுதல் வேட்டை முடுக்கி விடப்பட்டுள்ளது. அங்கு கள்ளத் துப்பாக்கி தயாரிப்பு தொழிற்சாலை இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
ஆயுதங்கள் பிடிபட்டுள்ளதைத் தொடர்ந்து தென் மண்டல ஐஜி சஞ்சீவ் குமார் தேனி விரைந்துள்ளார்.