அரிசி கடத்தல்காரர்களுக்கு நூதன தண்டனை கொடுத்த கோர்ட்
மதுரை: ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேருக்கு முன் ஜாமீன் வழங்கிய மதுரை உயர்நீதிமன்றக் கிளை வித்தியாசமான நிபந்தனையும் விதித்துள்ளது. மனநலம் குன்றியோர் காப்பகத்துக்கு அரிசியை தானமாக வழங்க வேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை.
ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக மதுரையைச் சேர்ந்த செல்லையா (43), சேது (45), திண்டுக்கல்லைச் சேர்ந்த டேவிட் (26), கஜேந்திரன் (50) ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். தலைமறைவாக இருந்த நான்கு பேரும் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிபதி டி.சுதந்திரம், அவர்களுக்கு வித்தியாசமான நிபந்தனையுடன் முன் ஜாமீன் வழங்கியுள்ளனர். அந்த வித்தியாச நிபந்தனை இதுதான். திண்டுக்கல்லைச் சேர்ந்த இருவரும் தலா 250 கிலோ அரிசியை வெளி மார்க்கெட்டில் வாங்கி திண்டுக்கல் செல்லமந்தாடியில் உள்ள அன்பாலயா முதியோர் இல்லத்துக்கு தானமாக கொடுக்க வேண்டும்.
மதுரையைச் சேர்ந்த இருவரும் அதேபோல 250 அரிசியை வெளி மார்க்கெட்டில் வாங்கி, மதுரையில் உள்ள அன்பகம் மனநலம் குன்றிய குழந்தைகள் காப்பகத்துக்கு கொடுக்க வேண்டும்.
இந்த அரிசி தரமான அரிசியாக இருக்க வேண்டும். அதற்கான பில்லை சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்தில் சமர்பிக்க வேண்டும். அரிசியை கொண்டு செல்லும் போக்குவரத்து செலவையும் மனுதாரர்களே ஏற்க வேண்டும் என்றும் நிபந்தனை விதித்தார் நீதிபதி.












Click it and Unblock the Notifications