பார்வை இழந்த 20 பேருக்கு தலா ரூ.5 லட்சம்-கருணாநிதி
சென்னை: இலவச காட்ராக்ட் அறுவை சிகிச்சையின்போது பார்வை இழந்த 20 பேருக்கு தலா ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்டப்பார்வை இழப்புத்தடுப்புச் சங்கம் மற்றும் பெரம்பலூர் தனியார் ஜோசப் கண் மருத்துவமனை இணைந்து 28.7.2008 அன்று நடத்திய இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாமில் சிகிச்சை பெற்ற 68 பேரில், 29 பேர் கண்பார்வை இழப்புக்கு ஆளாகி திருச்சியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதல்வரின் அறிவுறுத்தலின்படி மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் இன்று திருச்சிக்கு சென்று நேரில் பார்வையிட்டுள்ளார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 29 பேரில், 9 பேருக்கு கண் பார்வை மீண்டும் கிடைத்துள்ளது.
20 பேருக்கும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு முழுமையாக பார்வை பாதிக்கப்பட்டுள்ள இந்த 20 பேருக்கும் முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சம் வீதம் மொத்தம் ஒரு கோடி ரூபாய் வழங்கிட முதல்வர் கருணாநிதி இன்று உத்தரவிட்டுள்ளார்.
மேலும் உடல் ஊன முற்றோருக்கு அளிக்கப்படும் அரசு ஓய்வூதியமான மாதம் ரூ. 400 வழங்கிடவும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார். தனியார் நடத்தும் இந்த மருத்துவமனைகளில் நடைபெற்றுள்ள இந்த வேதனையான சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்றும் அரசு சார்பில் அறிவிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.
திருச்சியில் அமைச்சர் ஆய்வு:
முன்னதாக, பாதிக்கப்பட்டு திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 29 பேரையும் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம், கே.என்.நேரு ஆகியோர் நேரில் சென்று பார்த்து விசாரித்தனர்.
பின்னர் அமைச்சர் பன்னீர் செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது
கண் அறுவை சிகிச்சைக்கு பிறகு பயன்படுத்தப்பட்ட சொட்டு மருந்து பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள 29 பேரில் 9 பேருக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது. அறுவை சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை விதிமுறைகளை மீறியுள்ளது. கண் அறுவை சிகிச்சை முகாம் நடத்த மாவட்ட கலெக்டரிடம் அவர்கள் அனுமதி பெறவில்லை.
அறுவை சிகிச்சை நடந்த பெரம்பலூர் மருத்துவமனையில் தேவையான வசதிகள் இல்லை. இதுகுறித்து ஆய்வு செய்ய நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஆய்வு செய்து மருத்துவமனை நிர்வாகத்தின் விதிமீறல்களை கண்டுபிடிப்பார்கள். இதுகுறித்து முதல்வரிடம் தெரிவித்து நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications