மீனவர்களை நிர்வாணமாக்கி இலங்கை கடற்படை அட்டூழியம்
ராமேஸ்வரம்: தமிழக மீனவர்களை நிர்வாணமாக்கி சித்திரவதை செய்துள்ளாக இலங்கை கடற்படை மீது பரபரப்பு புகார் எழுந்துள்ளது.
கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவது, துப்பாக்கி சூடு நடத்துவது, வலைகளை பிடுங்கி வைத்துக் கொள்வது, வலைகளை சேதம் செய்வது என இலங்கை கடற்படையினர் அட்டூழியம் செய்து வருகின்றனர். இது தொடர்பாக மீனவர்கள் தொடர்ந்து குற்றம்சாட்டியும் நடவடிக்கை கோரியும் வருகின்றனர்.
இலங்கை கடற்படையினரின் அராஜகத்தை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் அடிக்கடி மறியல், ஆர்பாட்டம் போன்ற போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் ராமேஸ்வரத்தில் இருந்து 600 விசை படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். இவர்களில் சுமார் 10 படகுகளைச் சேர்ந்த மீனவர்கள் தனுஷ்கோடி 3ம் தீடை அருகே நடு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு திடீரென வந்த இலங்கை கடற்படையினர் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தி தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் துப்பாக்கி முனையில் மீனவர்கள் சிலரை நிர்வாணப்படுத்தி தாக்குதல் நடத்தியதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
வலைகளையும் அறுத்து நாசம் செய்ததாகவும் மீனவர்கள் புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து தாக்குதலுக்குள்ளான மீனவர் ஜோசப் கூறுகையில், மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் முதலில் துப்பாக்கிச் சூடு நடத்திக் கொண்டே எங்களை நெருங்கினர். எங்களை நிர்வாணப்படுத்தி தாக்கினர். இனி இந்த பகுதியில் மீன்பிடிக்கக் கூடாது. மீறி வந்தால் கொலை செய்து விடுவோம் என்று மிரட்டினர்.
மீன் பிடிப்பதற்காக விரித்து வைத்திருந்த வலைகளையும் அறுத்து எறிந்தனர். எங்களிடம் இருந்த செல்போன், டார்ச் லைட், பிடித்து வைத்திருந்த மீன்களை பிடுங்கி சென்றனர். படகில் இருந்த எங்களின் உடமைகளையும் கடலில் வீசி எறிந்தனர். எங்களை தாக்கியவர்கள் தமிழில்தான் பேசினார்கள் என்றார்.
தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் இந்த பிரச்சனையில் மத்திய, மாநில அரசுகள் உடனே தலையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மீனவர் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications