ஒரே நபரை 2 பெண்களுக்கு தாலிகட்ட வைத்த போலீஸ்
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் அருகே உள்ள அரியூரைச் சேர்ந்தவர் ரமேஷ் (26), எல்ஐசி ஏஜெண்ட். இவர் நந்தாமூர் கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரது மகள் சத்யாவை காதலித்துள்ளார். காதல் எல்லை தாண்டியதில் சத்யா கர்ப்பமடைந்தார்.
இதுகுறித்து ரமேஷிடம் கூறிய சத்யா உடனை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்திள்ளார். இதற்கு ரமேஷ் மறுக்கவே சத்யா தனது பெற்றோர்களுடன் சென்று திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீசார் ரமேஷை பிடித்து வந்து விசாரணை நடத்தினர். சத்யாவை திருமணம் செய்து கொள்ளும்படி அறிவுரை கூறினர். ரமேஷூம் திருமணத்திற்கு சம்மதித்தார்.
இந்நிலையில் அரியூரில் வசிக்கும் முனியன் என்பவரது மகள் அவுராம்பு என்பவரும் திருக்கோவிலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ரமேஷ் தன்னை இரண்டு வருடமாக காதலிப்பதாகவும், மேலும் அவருடன் தான் தாலி கட்டாமல் கணவன் மனைவி போல் வாழ்கை நடத்தியதாகவும் போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் ரமேஷை யாருக்கு திருமணம் செய்து வைப்பது என்று அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் ரமேஷ், சத்யா, அவுராம்பு ஆகியோரது பெற்றோர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது தான், சத்யா மற்றும் அவுராம்பு இருவரையும் காதலிப்பதாகவும், இருவரையும் திருமணம் செய்து கொள்வதாகவும் ரமேஷ் கூறினார். இதை பெண்களின் பெற்றோரும் ஏற்றுக் கொண்டனர். திருமணத்திற்கு போலீசாரும் அனுமதி அளித்தனர்.
இதையடுத்து திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் சத்யா மற்றும் அவுராம்பு இருவருக்கும் ரமேஷ் தாலி கட்டினார். ஒரே நேரத்தில் கோவிலில் வைத்து இரு பெண்களுக்கு ஒரே நபர் தாலி கட்டியது இதுவே முதல் முறை என்று கோவில் ஊழியர்கள் கூறினர்.
ஆனால் ஒரே நேரத்தில் கோவிலில் வைத்து இரு பெண்களுக்கு ஒரே நபர் தாலி கட்ட வைத்தது பெண்களின் உரிமையை பறிக்கும் செயல் என மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.