தண்டவாள விரிசல்-தப்பியது பொதிகை எக்ஸ்பிரஸ்
சோழவந்தான்: சோழவந்தான் அருகே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது உரிய நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டதால் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.
நேற்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னையிலிருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில், கொடைரோடு ரயில் நிலையத்தை கடந்து வந்து கொண்டு இருந்தது. அப்போது சோழவந்தான் அருகே கருப்பட்டி கிராமத்தில் உள்ள ரயில்வே கேட் அருகே தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை கேட் கீப்பர் கண்டுபிடித்தார்.
இதுகுறித்து அவர் உடனடியாக ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். அதற்குள் பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் வாடிப்பட்டியை நெருங்கிவிடவே உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி வாடிப்பட்டி ரயில் நிலையத்தில் அந்த ரயில் நிறுத்தப்பட்டது.
பின்னர் மதுரையில் இருந்து ரயில்வே இன்ஜினீயர்கள் விரைந்து சென்று, விரிசல் ஏற்பட்ட தண்டவாளத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு பிறகு சீரமைப்பு பணி முடிந்தது. இதையடுத்து அந்த வழியாக பொதிகை எக்ஸ்பிரஸ் கடந்து சென்றது.
இதனால் மதுரைக்கு அதிகாலை 5 மணிக்கு செல்ல வேண்டிய அந்த ரயில் காலை 6.40 மணிக்கு வந்து சேர்ந்தது. இதனைத்தொடர்ந்து நெல்லை எக்ஸ்பிரஸ் காலை 7.45 மணிக்கும், பாண்டியன் எக்ஸ்பிரஸ் 8 மணிக்கும் தாமதமாக வந்தன. உரிய நேரத்தில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபரீதம் தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications