அமைச்சர் பன்னீர் செல்வம் மீது கொலை மிரட்டல் புகார்
கடலூர்: தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சமீபத்தில் அதிமுகவில் இணைந்த முன்னாள் திமுக பிரமுகர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி ஒன்றியக்குழு தலைவராக இருப்பவர் சண்முகசுந்தரம். திமுகவில் இருந்த இவருக்கும், அமைச்சர் பன்னீர் செல்வத்திற்கும் இடையே அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடு இருந்து வந்தது. அமைச்சர் பன்னீர் செல்வத்தின் செயல்பாடுகள் பிடிக்காமல் கட்சியில் இருந்து வந்தார்.
பின்னர். கடந்த சில திங்களுக்கு முன்பு திமுகவில் இருந்து விலகி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார்.
இந்த நிலையில் சண்முகசுந்தரம், கடலூர் எஸ்பி பிரதீப் குமாரை நேரில் சந்தித்து புகார் கொடுத்துள்ளார். தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தனக்கு கொலை மிரட்டல் விடுத்தாகவும், எனவே தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று புகாரில் கூறியுள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட எஸ்பி, இதுகுறித்து விசாரிப்பதாக கூறியுள்ளார்.
இது திமுகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி. சாமி மீதும் மிரட்டல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.