முல்லைவேந்தன் Vs பெரியண்ணன்: திமுக கோஷ்டி மோதல்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நடந்து வரும் திமுக உள்கட்சி தேர்தலில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில் கார் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இது தொடர்பாக 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டத்தில் திமுக உள்கட்சி தேர்தல் நடக்கிறது. நகரம், ஒன்றியம், பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் ஆதரவாளர்களுக்கும், எம்எல்ஏ பெரியண்ணன் ஆதரவாளர்களுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், காரிமங்கலத்தில் நடைபெற்ற தேர்தலில் இரு தரப்பினர்க்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் அந்த வழியே வந்த பைக்குகளை மறித்து அடித்து உடைக்கப்பட்டன. அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளையும் திமுகவினர் அடித்து உடைத்தனர்.
இதனால் அந்த பகுதி போர்க்களம் போலானது. தகவல் அறிந்த காரிமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அராஜகத்தில் ஈடுபட்டவர்களை கலைத்தனர். இதுதொடர்பாக 8 பேரை கைது செய்தனர்.