'நானே'-டாடாவை ஜார்க்கண்ட்டுக்கு அழைக்கும் சிபு
ராஞ்சி: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியால் கடும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ள நானோ கார் தொழிற்சாலையை ஜார்க்கண்டில் அமைக்குமாறு டாடா நிறுவனத்துக்கு அம் மாநில புதிய முதல்வர் சிபு சோரன் அழைப்பு விடுத்துள்ளார்.
ஜார்க்கண்ட் முதல்வராக நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக் கொண்ட சிபு சோரன், வரும் 1ம் தேதிக்குள் சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபி்த்தாக வேண்டும்.
இதற்காக இன்று சட்டசபையை கூட்டியுள்ளார் சிபு. இன்றே அவர் நம்பிக்கை ஓட்டு கோரலாம் என்றும் தெரிகிறது.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய சிபு,
ஜார்க்கண்ட் மாநிலம் டாடாவுக்கு புதிதல்ல. இங்கு தான் அவர்கள் மிகப் பழமையான தொழிற்சாலைகள் எல்லாம் உள்ளன. அவர்கள் வெளியாட்கள் அல்ல, அவர்களை ஜார்க்கண்டை சேர்ந்தவர்களாகவே மக்கள் நினைக்கின்றனர்.
அரசியல் பிரச்சனையால் நானோ கார் தொழிற்சாலையில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், ஜார்க்கண்டுக்கு வந்துவிடுங்கள் என்று டாடாவை அழைக்கிறேன்.
எந்த முதலீட்டாரும் ஜார்க்கண்டை தவறாக பார்க்க வேணடிய அவசியமில்லை. எந்த பயமும் இல்லாமல் இங்கு வரலாம். எல்லா வகையான முதலீடுகளையும் வரவேற்கிறேன். எனக்குத் தேவை என் மாநில இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைப்பது தான்.
இங்கு நக்ஸல்கள் பிரச்சனை இருப்பது உண்மை தான். அவர்களுடன் நானே நேரில் பேச்சு நடத்த முயல்வேன். அதற்கு முதலில் அவர்கள் வன்முறையைக் கைவிட வேண்டும்.
வேலை தேடி நகரங்களுக்கு ஓடுவதை விட்டு விட்டு ஜார்க்கண்ட் மாநில கிராமப் புற மக்கள், மீண்டும் கிராமங்களுக்கே திரும்பி விவசாயத்தை கவனிக்க வேண்டும். அது தான் நிலத்தையும் காப்பாற்றி வயிற்றையும் காப்பாற்றும் என்றார் சிபு.