மதுரை அரசு மருத்துமனை கேவல நிலை!
மதுரை:மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள பல்வேறு பிரிவுகளில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை கட்டுப்படுத்த கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளைக்கு வந்த கடிதத்தை பொது நல மனுவாக ஏற்றுக் கொண்டு அதிரடி விசாரணைக்கு உத்தரவிட்டார் நீதிபதி.
மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வருவோரிடம் அங்கு பணியாற்றும் ஊழியர்கள் ஈவு இரக்கமின்றி பணம் பறித்து வருகின்றனர்.
இந் நிலையில் மதுரை முனிச்சாலையை சேர்ந்த அப்துல் ரசாக் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளை பதிவாளர்ருக்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், நான் சர்க்கரை நோய்க்கு சிகிச்சை பெற மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்றேன்.
அங்கு, சர்க்கரை பரிசோதனைக்காக சிறுநீர் எடுத்து வர கழிப்பறைக்கு சென்றேன். கழிப்பறை மிகவும் மோசமான நிலையிலும், நாறிப் போயும், பழுதடைந்தும், துர்நாற்றம் வீசிக் கொண்டும் இருந்தது.
மேலும் அங்கு பணிபுரியும் ஊழியர்கள், சிகிச்சை பெற வரும் நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கிய பிறகே வேலை செய்கின்றனர்.
மருத்துவமனையை தூய்மையாக பாரமரிக்க வேண்டும் என்று கடந்த 2006ம் ஆண்டு நீதிமன்றம் உத்தரவிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கடிதத்தில் கூறியிருந்தார்.
இந்த கடிதத்தை நீதிபதி எலிப் தர்மாராவுக்கு அனுப்பி வைத்தார் பதிவாளர். இதையடுத்து இந்த மனு நீதிபதி எலிப் தர்மாராவ், நீதிபதி சுப்பையா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்தக் கடிதத்தையே பொது நல மனுவாக ஏற்பதாக அறிவித்த நீதிபதிகள், எதிர் மனுதாரராக தமிழக சுகாதாரத்துறை செயலாளர், மருத்துவ சேவை இயக்குனர், மதுரை அரசு மருத்துவமனை டீன் ஆகியோரை சேர்க்க உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கு விசாரணையை வரும் 4 ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். நீதிமன்றத்தின் இந்த அதி்ரடி நடவடிக்கையால் மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி அடைந்துள்ளது.












Click it and Unblock the Notifications