கூட்டணி கட்சிகள்: ஜெ முடிவு செய்வார்: வைகோ
சிவகங்கை: வரும் பொது தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அதிமுகதான் முடிவு செய்யும் என்று
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம் பூவந்தியில் நடந்த திருமண விழாவில் வைகோ பேசியதாவது:
தமிழ்நாடு முழுவதும் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதற்கு அரசின் குளறுபடிதான் காரணம். அதிமுக ஆட்சியில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டது இல்லை. இந்த ஆட்சியில்தான் மின் தட்டுப்பாடு உள்ளது.
மணல் கொள்ளையும் அதிகமாக உள்ளது. உரத் தட்டுப்பாடு, டீசல் விலை உயர்வு ஆகியவை மக்களை வாட்டி வதைக்கின்றன. இதற்கு மத்திய, மாநில அரசுகளே காரணம். விரும்பிய பதவி கிடைக்க டெல்லியை முகாமிட்டவர்கள் விலை வாசி உயர்வு குறைய டெல்லியை முற்றுகையிடாதது ஏன் என்பது தெரியவில்லை.
பாராளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி, கூட்டணியில் இடம் பெறும் கட்சிகள் எவை எவை என்பதை அதிமுகதான் முடிவு செய்யும். தற்போது திமுக அமைச்சர்கள் பலர் ஆள்கடத்தல், நிலமோசடி உள்பட பல்வேறு வழக்குகளில் சிக்கி தவிக்கிறார்கள்.
தொண்டர்களின் உழைப்பில் மதிமுக பூத்தது. இதில் நிச்சயம் குடும்ப ஆட்சி வராது. செப்டம்பர் 15ம் தேதி நான் நடத்தும் மாநாட்டை இந்த பகுதி பெண்கள் வந்து வாழ்த்த வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications