பீதியை கிளப்பிய விமான கடத்தல் ஒத்திகை!
சென்னை: விமானக் கடத்தலை தடுப்பது தொடர்பாக சென்னை விமான நிலையத்தில் நடந்த ஒத்திகை நிகழ்ச்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பழைய விமான நிலையத்தின் 12வது ரன்வே பகுதியில், நேற்று முன் தினம் இரவு 8 மணி அளவில் ஏராளமான போலீசாரும், அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டனர்.
தேசிய பாதுகாப்பு படை டி.ஜி.பி. பட் தலைமையில் 160-க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்கள், தமிழக கமாண்டோக்கள், மத்திய தொழிற்பாதுகாப்பு படை போலீசார் உள்பட 200-க்கும் மேற்பட்டோர் குவிக்கப்பட்டனர்.
அந்த வழியாக விமானங்கள் இறங்குவதற்கும், புறப்பட்டு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டது. விமான நிலைய ஊழியர்கள், பணியாளர்கள் யாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை.
இதனால் விமான நிலையப் பகுதியில் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது. என்ன நடந்ததோ என்று அனைவரும் குழம்பினர்.
தமிழக போலீஸ் டி.ஜி.பி. ஜெயின், சென்னை மாநகர போலீஸ் ஆணையாளர் சேகர் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் விமான நிலையத்துக்கு விரைந்தனர்.
போலீசாரும், கமாண்டோ படையினரும் ஏதோ கடத்தலை தடுக்கும் தீவிர பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரம் இந்த கடத்தல் தடுப்பு முயற்சி நடைபெற்றது. பிறகு இரவு 11 மணி அளவில் அதிரடிப்படையினரும், கமாண்டோ படையினரும், போலீசாரும் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
அவர்கள் போன பிறகுதான் விமான கடத்தலை தடுக்கும் ஒத்திகை நடந்ததே தெரிய வந்தது. இதையடுத்து அங்கு பதட்டம் தணிந்தது.