வங்கி மேலாளர் கொலை-திமுக நிர்வாகிக்கு வலை
ஸ்ரீவைகுண்டம்: தண்ணீர் வாங்குவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் வங்கி மேலாளர், திமுக இளைஞரணி செயலாளரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
நாசரேத் அருகேயுள்ள குளத்துக்குடியிருப்பைச் சேர்ந்தவர் தயாள்சிங். இவர் சாயர்புரத்திலுள்ள பிரகாசபுரம் கூட்டுறவு வங்கி மேலாளராக பணியாற்றினார். இவரது அண்ணன் சுந்தர்ராஜன் மகன் ஹரிஸ்ரவி. நாசரேத் நகர திமுக இளைஞரணி செயலாளராக உள்ளார்.
கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி குளத்துகுடியிருப்பில் உள்ள சர்ச்சில் அசனவிருந்து நடந்தது. இதற்கு தேவையான தண்ணீரை ஹரீஸ்ரவிக்கு சொந்தமான லாரி மூலம் ஏற்பாடு செய்யாமல் வெளியிலிருந்து வேறு லாரி மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டது. இதனால் தாயள்சிங்கிற்கும், ஹரீஸ்ரவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த ஹரீஸ்ரவி தயாள்சிங்கை கொலை செய்ய திட்டமிட்டார். இந்நிலையில் தயாள்சிங் நேற்று காலை வங்கிக்கு பைக்கில் புறப்பட்டார். ஹரீஸ்ரவி தனது நண்பர் ஒருவரோடு இன்னொரு பைக்கில் அவரை பின் தொடர்ந்து சென்றார்.
குரங்கணி கோயில் பின்புறம் உள்ள சாலையில் தயாள்சிங் சென்று கொண்டிருந்தபோது ஹரீஸ்ரவி அவரது பைக்கை தயாள்சிங்கை வழிமறித்தார். அவர் சுதாரிப்பதற்குள் ஹரீஸ்ரவியும், அவருடன் வந்தவரும் அரிவாளால் தயாள்சிங்கை சராமரியாக வெட்டிவிட்டு அங்கிருந்த தப்பினர்.
இதில் படுகாயமடைந்த அவரை தென்திருப்பேரை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். ஆனால் தயாள்சிங் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து ஹரீஸ்ரவியை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.